எதிர்கட்சியினருக்கு வாக்கு வங்கி மீது தான் அக்கறை, நாட்டு நலன்களில் அல்ல.. மோடி பிரச்சாரம்
சிக்கோடி: 2 வேளை உணவுக்கு வழியில்லாததால் தான் பலரும் ராணுவத்தில் சேர்கின்றனர் என்ற கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கருத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஊழல் செய்வதிலும், வாரிசு அரசியலிலும் ஒன்றாக சேர்ந்து கொள்கின்றன என்றார்.
2 வேளை உணவுக்காக தான் ராணுவத்தில் சேருகிறார்கள் என்ற அர்த்தத்தில் பேசும் தேவகவுடாவின் குடும்பம் பொதுவாழ்க்கையிலிருந்தே தூக்கியெறியப்பட வேண்டும் என்றார். எதிர்கட்சியினருக்கு பாகல்கோட் வாக்கு வங்கி மட்டும் தான் பிரச்னை. மக்களின் நலனை பாதிக்கும் பாலகோட் விவகாரம் பிரச்சனை அல்ல என கடுமையாக சாடினார்.
ராணுவ வீரர்களை நம்பாத காங்கிரஸ் கட்சி தான் உங்களை ஆள வேண்டுமா என வினவிய மோடி, பாகிஸ்தானை அவர்களது இடத்துக்கு சென்று தாக்கினோம். இதில் இந்திய குடிமக்களாகிய உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா என்றார். பலமில்லாத ஆட்சி எவ்வாறு இருக்கும் என்பதை கர்நாடக வாக்காளர்களாகிய நீங்கள் உங்கள் மாநிலத்தை பார்த்தே கற்று கொள்ளலாம்.
தமிழக பிளஸ் டூ ரிசல்ட்: சபாஷ்.. வழக்கம்போல மாணவர்களை முந்திய மாணவிகள்!
பலமான ஆட்சி எவ்வாறு இருக்கும் என்பதை கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் நிரூபித்துள்ளோம். உங்கள் ஓட்டு தேசியவாதத்தை நிலைக்க வைக்கவா அல்லது, வாரிசு அரசியல், ஊழல்,பயங்கரவாதம் போன்றவற்றை நிலைக்க வைப்பதற்கா என்பதை நன்கு சிந்தித்து முடிவு செய்யுங்கள். தேசிய பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, மத்தியில் வலுவான அரசு அமைய வேண்டுமெனில் பாரதிய ஜனதாவிற்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார் .