பம்பையில் வெள்ளம்.. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இன்றும், நாளையும் வர வேண்டாம்: தேவசம் போர்டு
சபரிமலை: பம்பை நதியில் கரைபுரண்டோடும் வெள்ளம் காரணமாக, இன்றும், நாளையும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று தேவசம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையான இன்று, நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதனிடையே, கேரளாவில் தற்போது கொட்டி வரும் கனமழையால், பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் பம்பா நதியை கடக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இருபாலங்களும், வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பக்தர்கள் பம்பா நதியை கடக்க முடியாத சூழல் நிலவுகிறது.
எனவே இன்றும், நாளையும், பக்தர்கள் யாரும் சபரிமலைக்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். மீறி சபரிமலை நோக்கி வரும் பக்தர்கள் எரிமேலி, பத்தினம்திட்டா, நிலக்கல், பம்பா ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவர். இவ்வாறு அறிவிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.