சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - டிசம்பர் 26ல் மண்டலபூஜை
மண்டபூஜைக்காக சபரிமலை கோவிலில் பூஜைகள் நடைபெறுவதை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சபரிமலை: ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலம் புக் செய்து தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முடிவடைந்துள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணைவதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.
ஐயப்பன் சபரிமலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். சபரிமலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.
சபரிமலை: 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு தேவை இல்லை - தேவஸ்தானம் அறிவிப்பு
பிரம்மச்சரிய கடவுள்
பிரம்மச்சரிய தெய்வமான ஐயப்பன் வீற்றிருக்கும் சபரிமலைக்கு, நாடு முழுவதும் இருந்தும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கடும் விரதமிருந்து இருமுடி கட்டிக்கொண்டும், சிலர் விரதம் மட்டும் இருந்து ஐயப்பனை மனம் குளிர கண்டு தரிசிக்க வருவதுண்டு. அதிலும் குறிப்பாக தமிழ் மாதம் முதல் நாளன்றும், மண்டல பூஜை காலங்களிலும் மகர விளக்கு மற்றும் மகரஜோதி தரிசனத்தை காணவும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருவதுண்டு.
மாலை அணிந்து விரதம்
இந்த வழக்கமான நடைமுறைகளெல்லாம் கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டது என்றே சொல்லலாம். காரணம், கொரோனா நோய் தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நாள்தோறும் 45 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
கூட்டம் அதிகரிப்பு
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நேற்றைய தினம், அதிகபட்சமாக 34ஆயிரத்து 900 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று 27,840 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் சனிக்கிழமை அன்று 42,354 பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து தரிசனத்திற்கு காத்திருப்பதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
தற்போதைய நிலவரப்படி வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் மண்டல - மகர விளக்கு பூஜை நிறைவு பெறும் வரை சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் நடை அடைக்கப்படும். பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சானிடைசர், முகக்கவசம் வழங்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு பேருந்துகள்
மண்டல பூஜையை அடுத்து மகரவிளக்கு பண்டிகையை ஒட்டி டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்களுக்காக பம்பை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.