ஸ்ரீ காளஹஸ்தியில் ராகு கேது தோஷ நிவாரண பூஜை: 5000 பக்தர்கள் குவிந்தனர்
ஸ்ரீ காளஹஸ்தி: ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் ராகு- கேது தோஷ நிவாரண பூஜைக்காக 5000 பக்தர்கள் வரை குவிந்தனர்.
கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. திருப்பதி வரும் பக்தர்கள் பஞ்சபூத தலங்களில் ஒன்றான காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருவதால் அங்கும் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வந்ததால் காள ஹஸ்தி கோவிலில் ராகு கேது, சர்வ பரிகார பூஜை செய்ய பக்தர்கள் அலை மோதினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பூஜைக்காக காத்து நின்றனர்.
ஞாயிறன்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். ரூ. 300 கட்டணத்தில் 3554 பக்தர்களும், ரூ. 750 கட்டணத்தில் 1154 பக்தர்களும் ரூ. 1500 கட்டணத்தில் 70 பேரும், ரூ. 2500 கட்டணத்தில் 34 பேரும் ராகுகேது பரிகார பூஜை செய்தனர். இது ஒரு கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களே அதிக அளவில் வந்ததாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் பூஜைக்கு தேங்காய் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். தேங்காய் கிடைக்காததால் பலர் பூஜை செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.