அமெரிக்காவில் தேவ்யானி கைது விவகாரம் முன்கூட்டியே திட்டமிட்ட சதி!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றியவர் தேவ்யானி கோப்ராகாடே. இவருடைய வீட்டில் வேலை பார்த்த சங்கீதா என்ற பெண்ணை, உறவுப்பெண் என்று கூறி அமெரிக்கா அழைத்து வந்ததாகவும், அவருக்கு அமெரிக்க சட்டப்படி முறையான சம்பளம் வழங்கவில்லை என்றும் அந்நாட்டு போலீசார் குற்றம் சாட்டினர். கடந்த 12ந் தேதி குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த தேவ்யானியை, பொது இடத்தில் மன்ஹாட்டன் போலீசார் கைது செய்தனர்.
அத்துடன் அவரை கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர். விசாரணை அலுவலகத்தில் அவரது ஆடைகளை களைய வைத்து சோதனை நடத்தினர். போதை மருந்து கடத்தல்காரர்கள் அடைக்கப்பட்ட சிறையில் தள்ளி போலீசார் அவமானப்படுத்தினர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் தேவ்யானியை திட்டமிட்டே அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தேவ்யானி வீட்டில் வேலை செய்த சங்கீதா மீது ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அந்த வழக்கில், சங்கீதாவை ஒப்படைக்க கோரி, அமெரிக்க அரசுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த விவரம் தெரிந்தும், சங்கீதாவை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அதற்கு காரணம், அவர் தங்களுடைய வழக்குக்கு உதவ வேண்டும் என்பதற்காக சங்கீதா கேட்டு கொண்டபடி, அவரது கணவர் பிலிப் மற்றும் 2 குழந்தைகளுக்கு ரகசியமாக விசா வழங்கி, நியூயார்க்குக்கு அமெரிக்க அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். சங்கீதாவின் குடும்பத்தினர், நியூயார்க் வந்த பின்னர்தான் அவர், மன்ஹாட்டன் போலீசாரிடம் தைரியமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில்தான் தேவ்யானி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அமெரிக்கா அரசு தரப்பு இதை மறுத்துள்ளது.