'தேவ்யானி': யு.எஸ். தூதரக கிளப்பை மூட உத்தரவு- போக்குவரத்து விதிகளை மதிக்கவும் உத்தரவு
டெல்லி: தேவ்யானி கோப்கரடே விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கடி மற்றும் எரிச்சல் தரும் வகையிலான அடுத்த கட்ட நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள கிளப்பை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி வரை இதற்கு டைம் தரப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை அமெரிக்க தூதகரம் மற்றும் அதன் அதிகாரிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இன்னொரு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க தூதரகத்தில் எந்தவிதமான வணிக ரீதியிலான நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் இருக்கக் கூடாது என்றும் இந்தியா உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அதில் பணியாற்றும் அதிகாரிகளின் கார்கள் இனிமேல் உள்ளூர் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸார், இனிமேல் இவர்களின் கார்களுக்கு விதிவிலக்கு அளிக்கத் தேவையில்லை என்றும் அனைத்து மாநில கா்வல்துறைக்கும் மத்திய அரசு உத்தரவு அனுப்பியுள்ளதாம்.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ஒரு கிளப் உள்ளது. அங்கு பார், நீச்சல் குளம், அழகு நிலையம், ஹோட்டல், பெளலிங் விளையாட்டு அரங்கம், டென்னிஸ் கோர்ட் ஆகியவை உள்ளன. இங்கு வெளியாட்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே வர்த்தக ரீதியிலான இந்த பயன்பாட்டை அனுமதிக்க முடியாது. எனவே கிளப்பை மூடுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தேவ்யானி கைதுக்குப் பின்னர் சின்னச் சின்னதாக பல்வேறு நெருக்கடிகளை அமெரிக்க தூதரகங்களுக்கு இந்தியா கொடுத்து வருகிறது என்பது நினைவிருக்கலாம். அதில் இப்போது இந்த உத்தரவுகளும் புதிதாக சேர்ந்துள்ளன.