விமானங்களில் சாம்சாங் கேலக்ஸி நோட் 7 செல்போன் பயன்படுத்த தடை
டெல்லி: விமானப் பயணங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 (Samsung Galaxy Note 7) மொபைல் போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங் நிறுவனம் இம்மாதம் தொடக்கத்தில் கேலக்ஸி நோட் 7 என்ற புதிய மொபைல் போனை அறிமுகம் செய்தது. இதனை பயன்படுத்திய அமெரிக்க மற்றும் கொரிய வாடிக்கையாளர்கள், இந்த போன் சார்ஜ் போட்டால் வெடித்து சிதறுவதாக புகார் தெரிவித்திருந்தனர்.
இவ்விவகாரம் சமூக வலைதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்திருந்த சாம்சங் நிறுவனம், தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட பேட்டரியை பயன்படுத்தும் கேலக்ஸி நோட் 7 மொபைல் மட்டும் வெடித்து சிதறுவதாக கூறியது. மேலும் பாதிப்படைந்த வாடிக்கையாளர்களுக்கு புதிய போன் வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தது.
இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 போனின் பேட்டரி எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதால், அதனை விமானப் பயணத்தின் போது பயன்படுத்த மத்திய விமான போக்குவரத்து துறை இயக்ககம் தடை விதித்துள்ளது. மேலும் சார்ஜ் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் சாம்சங் போனுக்கு விமானத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும், கேலக்ஸி நோட் 7 போன்களின் பேட்டரி தீப்பிடிப்பதாக புகார் எழுந்ததையடுத்து, அதனை திரும்பப்பெறுவதாக சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.