”இதுவரை 50 லட்சம் பேர் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்”- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
ஹைதராபாத்: இந்தியாவில் விறகடுப்பில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்காக தங்களது சமையல் கேஸ் மானியத்தை இதுவரையில் 50 லட்சம் பேர் விட்டுக் கொடுத்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறும்போது, ‘‘நாட்டில் மொத்தம் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சமையல் கேஸ் மானியத்தை தாங்களாகவே விட்டுக் கொடுத்துள்ளனர்.
இது மிகவும் ஆர்வத்தை தூண்டும் எண்ணிக்கை. மார்ச் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் நிறைவான அளவுக்கு உயரும் என்று நம்புகிறேன்'' என்றார்.
உயர் வருவாய் பிரிவினருக்கு கேஸ் மானியத்தை ரத்து செய்யும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்று கேட்டபோது, ‘‘யார் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும், யார் பெறவேண்டும் என்பதை இந்த சமூகம் தான் முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி அவர்கள் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். காத்திருந்து பார்ப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.