கோர்ட் உத்தரவு.. இன்டர்சிட்டி ரயிலை நடு வழியில் நிறுத்தி ஜப்தி செய்த அதிகாரிகள்! பயணிகள் அதிர்ச்சி
பெங்களூர்: விவசாயிகளுக்கு நிலத்திற்கான இழப்பீடு தர தாமதம் செய்த ரயில்வே துறைக்கு எதிராக சாட்டையை வீசிய கோர்ட், ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஹரிகரே-கொட்டூர் நகரத்தின் நடுவே ரயில்வே பாதை அமைக்கும் பணியின்போது, விவசாயிகளிடமிருந்து ரயில்வே துறை நிலம் கையகப்படுத்தியது. இதற்கு இழப்பீடாக சிவகுமார் என்ற விவசாயிக்கு ரூ.37 லட்சத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 2 வருடங்களாக இந்த இழப்பீடு தொகையை வழங்கவில்லை ரயில்வே துறை.
இதை எதிர்த்து சிவகுமார் கோர்ட் உதவியை நாடினார். வழக்கை விசாரித்த ஹரிகரே நகர கோர்ட், தார்வார்-மைசூர் இன்டர்சிட்டி ரயிலை ஜப்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இரு தினங்கள் முன்பு ஜப்தி நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
தார்வாரிலிருந்து, ஹரிகரேவுக்கு காலை 8 மணிக்கு இந்த ரயில் வந்தபோது அதிகாரிகள், அதற்கு மேல் ரயிலை நகர விடாமல் தடுத்துவிட்டனர். ரயில் பைலட்டை கீழே இறக்கிவிட்டனர். சுமார் 1 மணி நேரமாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
இதனிடையே, ஒரு வாரத்திற்குள் விவசாயிகளுக்கு உரிய பணத்தை வழங்குவதாக, ரயில்வே மேலாண் இயக்குநர் உறுதியளித்த பிறகு ரயில் இயக்கப்பட்டது. ரயிலையே ஜப்தி செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.