கால் சென்டர் பெண் ஊழியர் பலாத்கார வழக்கு: 5 பேருக்கு ஆயுள்!
டெல்லி: டெல்லியில் கால் சென்டர் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த ஐவருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி மிஸோரமைச் சேர்ந்த 30 வயது பெண், தெற்கு டெல்லி மோதி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு தனது சக ஊழியர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வாகனத்தில் வந்த ஐந்து பேர் அவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் மோங்கோல்புரி பகுதியில் விடப்பட்ட அவர் அதன்பிறகு இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், ஷம்ஷாத், உஸ்மான், ஷாசித், இக்பால், கம்ருதின் உள்பட 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இதனிடையே ஷம்ஷாத், உஸ்மான், ஷாசித், இக்பால், கம்ருதின் உள்பட 5 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த அக்டோபர் 14ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தண்டனை விபரம் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கால்சென்டர் பெண் ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.