பறவை காய்ச்சல் பீதிக்கு மத்தியில்... பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கிய தவான்.!
வாரணாசி: நாடு முழுவதும் பறவை காய்ச்சல் பயமுறுத்தி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தவான் படகு சவாரியின்போது பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தங்கள் படகுகளில் வரும் சுற்றுலாப் பயணிகளை பறவைகளுக்கு உணவளிக்க அனுமதி கொடுக்கும் படகோட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கபப்டும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.
நாடு முழுவதும் கொரோனா ஆட்டம் காட்டி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளா, சத்தீஸ்கர், அரியானா,மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதியாகி உள்ளது.
பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பல மாநிங்களில் கோழிகள், பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பறவை காய்ச்சல் பயமுறுத்தி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தவான் பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வாரணாசியில் படகு சவாரி செய்த தவான், படகில் இருந்தபடி அங்கு வரும் பறவைகளுக்கு உணவளிக்கிறார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களை வெளியிட்ட அவர் ''பறவைகளுக்கு உணவளிப்பது எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் தவானின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கூறுகையில், ''சுற்றுலாப் பயணிகள் பொதுவாக பறவைகளுக்கு உணவளிப்பது தொடர்பான விஷயங்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். சில படகோட்டிகள் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் படகுகளில் வரும் சுற்றுலாப் பயணிகளை பறவைகளுக்கு உணவளிக்க அனுமதி கொடுக்கின்றனர். இனிமேல் இதுபோல் படகோட்டிகள் செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபப்டும். படகு உரிமம் ரத்து செய்யபப்டும் என்றார்.