நிறுவன பொறுப்புகளில் அம்பானி சகோதரர்களின் வாரிசுகள்! அடுத்த தலைமுறை போட்டி ஆரம்பம்
மும்பை: அம்பானி குடும்பத்தின் அடுத்த தலைமுறை வாரிசுகள் ஒரே நேரத்தில் தங்கள் தந்தையின் தொழிலில் களமிறக்கப்பட்டுள்ளதால் ரிலையன்ஸ் குடும்பத்தின் வர்த்தகம் குறித்து வணிக துறை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பிலுள்ளனர்.
திருபாய் அம்பானி உருவாக்கிய சொத்துக்களை முகேஷ் மற்றும் அனில் ஆகிய இரு மகன்களும் பிரித்துக்கொண்டனர். இந்நிலையில், முகேஷின் மூத்த மகன் ஆகாஷ் மற்றும் அனிலின் மூத்த மகன் ஜெய் அன்மோல் ஆகியோர் தங்களது தந்தைகளின் நிறுவனங்களில் பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.
அடுத்தடுத்து பொறுப்பேற்பு
ஒரு மாத இடைவெளியில் இருவருமே பொறுப்பேற்றுள்ளது அடுத்த தலைமுறை போட்டியை வெளிச்சம்போட்டு காட்டுவதாக உள்ளது.
முக்கிய துறைகள்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸ் கேப்பிட்டல் துறையின் செயல்படுத்துதல் துறையில் ஆகாஷுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அனில் தனது மகன் ஜெய் அன்மோலுக்கு, தனது நிறுவனத்தின் நிதித்துறை பொறுப்பை வழங்கியுள்ளார்.
படித்த தலைமுறை
ஆகாஷ் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ஜெய் அன்மோல் ஐரோப்பாவின் வார்விக் வர்த்தக பள்ளியில் பட்டப்படிப்பை முடித்தவர்.
சிறுவயதிலேயே பொறுப்பு
முகேஷ் மற்றும் அனில் ஆகிய இருவரும் தங்களது தந்தையின் நிர்வாகத்தில் 24 வயதுக்கு மேல் பங்கெடுக்க தொடங்கினர். அவர்களின் மகன்கள் 22வது வயதிலேயே பொறுப்பை ஏற்றுள்ளனர்.
தொழிலதிபர்களும் வாரிசுகளும்
தொழிலதிபர்கள் அதானி, ஹர்ஷ் கோயங்கா, அனில் அகர்வால், துள்சி போன்றோரின் வாரிசுகள் தங்களது தந்தை தொழிலில் கால் பதித்துவிட்டனர். அதே நேரம் எச்சிஎல் நிறுவனத்தின் சிவ்நாடார் மகள் ரோஷினியோ தனது தந்தையின் நிழலில் வளர வேண்டாம் என்று முடிவெடுத்து ஹெல்த்கேர் துறையில் தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.