எண்டா.. எனக்கா? தோனி சொன்ன அந்த பதில்.. "திருப்பி கொடுக்கணும்ல..”.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
அகமதாபாத் : 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் கோப்பை வென்று அசத்திய மகிழ்ச்சி ஒருபுறம் என்றால், தனது ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி.
ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 14 சீசன்களில் 12 முறை பிளே ஆப் சென்று, 10 முறை பைனலுக்கும் சென்று, 4 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் களமிறங்கிய அனைவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்களை குவித்தது. மழையின் குறுக்கீடு காரணமாக சிஎஸ்கேவுக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
சரவெடி ஆட்டம் :
சிஎஸ்கே அணி வீரர்கள் பந்துகளை வீணாக்காமல் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இறுதி ஓவரில் 6 பந்துளில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மோஹித் ஷர்மா முதல் 4 பந்துகளையும் யார்க்கர்களாக வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அடுத்த பந்தில், ரவீந்திர ஜடேஜா சிக்ஸர் அடித்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஜடேஜா பவுண்டரி அடித்து அசத்தினார்.
இதனால், சிஎஸ்கே 15 ஓவர்களில் 171 ரன்களை சேர்த்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை அணி வீரர்கள் மைதானத்துக்குள் ஓடிச் சென்று வெற்றியைக் கொண்டாடினர். சிஎஸ்கேவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜடேஜாவை தூக்கிக் கொண்டாடினார் தோனி. வின்னிங் ஷாட்டை கூல் கேப்டன் தோனிக்குச் சமர்ப்பித்தார் ஜடேஜா.
தோனி ஓய்வு? :
இந்த த்ரில்லான வெற்றிக்கு பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, "சொல்லப்போனால் ஓய்வை அறிவிக்க இதுவே சிறந்த நேரம். இப்போதே ஓய்வை அறிவிப்பது எளிதான விஷயம், ஆனால் 9 மாதங்கள் கடினமாக உழைத்து மேலும் ஒரு சீசனில் விளையாட முயற்சிப்பது பெரிய சவாலாக இருக்கும்.
ஆனால் அதற்கு எனது உடல் தாங்க வேண்டும். எல்லாம் உடல் ஒத்துழைப்பை பொறுத்து உள்ளது. அதை முடிவு செய்ய இன்னும் 6-7 மாதங்கள் உள்ளன. நான் பெற்ற அன்பின் அளவுக்கு என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான் எனத் தெரிவித்தார்.
அப்போது வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, "வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் உங்களிடம் இருந்து சாதாரணமாக எந்தவிதமான உணர்ச்சியும் வெளிப்படாது. இதற்கு முன் சென்னையில் ஒருமுறை உங்களிடம் பேசும்போது முதல்முறையாக ரசிகர்களை பார்த்து நீங்கள் உணர்ச்சிவசப்பட்டதை பார்த்தேன்" என்றார்.
தோனி பதில் :
அதற்கு பதிலளித்துப் பேசிய தோனி, "ஒரு உண்மை, இது எனது கரியரின் கடைசி கட்டம். இந்த சீஸனின் முதல் போட்டி இங்குதான் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் விளையாடும்போது மொத்த மைதானமும் எனது பெயரை உச்சரிக்கும்போது என் கண்களில் நீர் நிறைந்தது. என்னை அமைதிப்படுத்திக்கொள்ள முயன்றேன். இதை அழுத்தமாக இல்லாமல், இதை நான் அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
இதேதான் சென்னையில் நடைபெற்ற கடைசி போட்டியிலும் நடந்தது. இந்த தருணங்கள் எல்லாம் மீண்டும் நடக்கும், மீண்டும் போட்டிகளில் விளையாடலாம் என நினைக்கிறேன். எதுவானாலும் நடக்கலாம். நான் என்னவாக இருக்கிறேனோ அதற்காகவே மக்கள் என்னை இந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஐபிஎல் மாதிரியான ஒரு கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் ஒவ்வொருவரும் தாங்களே மைதானத்தில் விளையாடுவதை போல் உணர்கிறார்கள். அதனால் ஒவ்வொருவரும் மற்றவர்களை விட தங்களை என்னுள் கனெக்ட் செய்து பார்க்கிறார்கள் என்பதே இத்தனை அன்புக்கான காரணம் என நான் நினைக்கிறேன்.
சறுக்கல் :
நாங்கள் வென்ற ஒவ்வொரு கோப்பையும் சிறப்பு மிகுந்ததே. ஆனால் ஐபிஎல்லின் சிறப்பு என்னவென்றால், நெருக்கடியான அனைத்து ஆட்டங்களுக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதே. இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு நிறைய சறுக்கல்கள் இருந்தன. எங்களின் பவுலிங் எடுபடவில்லை. பேட்டிங் சிறப்பாக அமைந்து, பவுலர்களின் அழுத்தத்தை குறைத்தது.
சில நேரங்களில் நானும் எரிச்சல், விரக்தி அடைவது உண்டு. அது மனிதர்களின் பொதுவான உணர்வு. ஆனால், மற்றவர்கள் நிலையிலிருந்து என்ன மாதிரியான அழுத்தங்கள் அவர்களுக்கு இருந்தது என யோசிக்க முயற்சிப்பேன். அதனால், பல நேரங்களில் அமைதியாக கடந்து விடுவது உண்டு. ஒவ்வொரு தனிமனிதனும் அழுத்தத்தை வித்தியாசமாக கையாள்கின்றனர்." எனப் பேசினார் தோனி.
ஃபேன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி :
இந்த ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் இருந்தே தோனி, இந்த ஆண்டுடன் ஐபிஎல்லில் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தோனி விளையாடுவதை பார்ப்பதற்காகவே, சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகளில் எல்லாம் மஞ்சள் ரசிகர் படை திரண்டது. தோனியின் வெற்றி இன்னிங்ஸை பார்த்துவிட ரசிகர்கள் துடித்தனர்.
இறுதிப் போட்டியில் வெற்றியுடன் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி போட்டியில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வந்த வேகத்தில் முதல் பந்திலேயே அவுட் ஆனார். இதனால், எப்போதும் இல்லாத அளவுக்கு அப்செட்டாக காணப்பட்டார் தோனி.
கொண்டாட்டம் தான் :
ஆனால், கடைசி பந்தில் ஜடேஜா வெற்றியைத் தேடிக் கொடுத்ததும், கண்களில் நீர் ததும்ப ஓடிச் சென்று அவரை தூக்கிக் கொண்டாடினார் தோனி. சிஎஸ்கே வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும், தோனியை 5வது முறையாக ஐபிஎல் கோப்பை உடன் பார்த்துப் பரவசமாகினர்.
இந்நிலையில், ஓய்வை முடிவு செய்ய இன்னும் 6-7 மாதங்கள் உள்ளன. நான் பெற்ற அன்பின் அளவுக்கு என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான் எனத் தெரிவித்தார்.
இதன்மூலம், தோனி அடுத்த சீசனின் மினி ஏலத்திற்கு முன் அல்லது 17ஆவது சீசன் முடிந்த பிறகு தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, இன்னொரு சீசனில் தோனி என்ட்ரியாகப் போவது ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் தான்.