எம்.எஸ் டோணியின் ஆதார் ரகசியம் வெளியானது - ரவிசங்கர் பிரசாத்திடம் சாக்ஷி புகார்
ஆதார் ரகசியங்கள் பாதுகாப்பானது என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் டோணியின் ஆதார் ரகசியங்கள் வெளியானது பற்றி அவரது மனைவி சாக்ஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் டோணியின் ஆதார் ரகசியங்கள் வெளியானது பற்றி அவரது மனைவி சாக்ஷி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் புகார் அளித்துள்ளார். தனி மனித ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகேந்திரசிங் டோணி தனக்கு ஆதார் எண் பெறுவதற்காக விண்ணப்பம் செய்தார். தனது கைரேகை உள்ளிட்ட விபரங்களையும் பதிவு செய்தார். இப்பணியில் ஈடுபட்ட சி.எஸ்.சி. இ -கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம், போட்டோக்களுடன் தகவல்களை டுவிட்டரில் வெளியிட்டது.
அதில் டோணி தன் கைரேகைகளை பதிவு செய்யும் போட்டோ மட்டுமல்லாமல், அவரது ஆதார் விண்ணப்ப போட்டோ, விபரங்களும் பதிவிடப்பட்டன. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
சாக்ஷி அதிர்ச்சி
டோணியின் மனைவி சாக்ஷி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கை டேக் செய்து அதில் புகார் அளித்தார். ‛விண்ணப்ப போட்டோவை வெளியிடலாமா; தனி மனித சுதந்திரம் என்பது இருக்கிறதா ? இல்லையா ?" என்று வினவினார்.
|
ரவிசங்கர் பிரசாத் பதில்
இதற்கு பதில் அளித்த ரவி ஷங்கர் பிரசாத், தனிமனித விவரங்கள் ஏதேனும் வெளியிடப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, சி.எஸ்.சி. இ -கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வெளியிட்ட புகைப்படங்களை சாக்ஷி பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து, இப்பிரச்சனை தொடர்பாக விசாரணையும், கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் என்று கூறியுள்ளார்.
|
திக் விஜய் சிங்
இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ள கருத்தில், 'இது போல தனிப்பட்ட விவரங்கள் வெளியாகுவது மிகப்பெரிய அவமானம்.
என்று பதிவிட்டுள்ளார்.
|
மன்னிப்பு கேட்க வேண்டும்
இதற்காக பிரஷாத் உடனடியாக மன்னிப்பு கேட்பதுடன், டோணிக்கு வேறு ஆதார் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆதார் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் டோணியின் விபரங்கள் வெளியானது எப்படி என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.