சமாஜ்வாடியில் டோணி பிரதர்! கங்குலிக்கு கம்யூ.வும் வலை!!
கொல்கத்தா: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசியல் கட்சிகள் வலை வீசுவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சகோதரர் நேற்று திடீரென சமாஜ்வாடி கட்சியில் சங்கமித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை பாஜக வளைக்கிறது, காங்கிரஸ் வளைக்கிறது என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் கங்குலியோ பாஜகவுக்கு நோ சொல்லிவிட்டார்.
இதனால் காங்கிரஸும் தம் பங்குக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் கங்குலியை வளைத்துப் போட களத்தில் குதித்துள்ளன.
யெச்சூரி பாராட்டு
இதன் உச்சமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரியோ, 'கங்குலி கம்யூனிசக் கொள்கையை பின்பற்றுபவர்; அவரின் ஆதரவு எப்போதும் எங்களுக்குத் தான் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து கங்குலி பிடிவாதம்
ஆனால் அரசியலில் ஈடுபடுவதுகுறித்து, தாம் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்பதுதான் கங்குலியின் நிலைப்பாடாக இருக்கிறது.
டோணி பிரதர்
இதேபோல் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோணியின் சகோதரர் நரேந்திர சிங் டோணி திடீரென நேற்று சமாஜ்வாடியில் கட்சியில் இணைந்திருக்கிறார்.
ஜார்க்கண்ட்டில்..
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நரேந்திர சிங் டோணி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமாஜ்வாடியை கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.