ஒடிசாவில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர்கள்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர்களை பயன்படுத்த ஹெச்.ஏ.எல் திட்டமிட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் சுனாபீடா எந்ற பகுதியில் ஹெச்.ஏ.எல் பிரிவு இயங்கிவருகிறது. இங்கு ஐந்து ஹெலிபேட்களை ஒடிசா அரசு அமைத்துக் கொடுத்துள்ளது. துருவ் வகை ஹெலிகாப்டர்களை அதிக அளவில் அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆபத்து காலங்களில் மீட்பு நடவடிக்கைகளில் துருவ் ஹெலிகாப்டர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கண்காணிப்புக்கும் இந்த வகை ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஒடிசாவின் சுனாபேடா பகுதி அமைந்துள்ள கோரபுட் பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பலரது உயிரை ஹெச்.ஏ.எல் நிறுவனம் காப்பாற்றிக் கொடுத்துள்ளதாக அவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
இந்த வகை ஹெலிகாப்டர்கள் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவையாகவும் பயன்படுத்தப்படுவதால் ஒடிசாவில் ஆபத்துகால நண்பனாக ஹெச்ஏஎல் மாறியுள்ளது. குறிப்பாக துருவ் ஹெலிகாப்டர்கள் அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகியுள்ளன.
கோரபுட் மாவட்டத்தில் ஏகப்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. எனவே, வருங்காலங்களில் சுற்றுலா பயன்பாட்டுக்காகவும், இந்த வகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்த ஹெச்.ஏ.எல் திட்டமிட்டுள்ளது. இதற்கு மாநில அரசின் சம்மதத்திற்காக காத்துள்ளது ஹெச்.ஏ.எல்.