வா, வா, வா: சர்க்கரை நோயை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் இந்தியர்கள்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த சரத் திரிபாதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு 33வது வயதில் சர்க்கரை நோய் ஏற்பட்டது. சேல்ஸ் வேலை காரணமாக சரியாக சாப்பிட முடியாமல் ஊர், ஊராக அலைந்ததால் சர்க்கரை நோயாளியானது தான் மிச்சம்.
இனியாவது ஒழுங்காக சாப்பிட்டு, மருந்து எடுத்துக் கொண்டு வாழ வேண்டும் என்று சரத் முடிவு செய்த வேளையில் அவரின் 60களில் இருக்கும் தாய்க்கு சர்க்கரை நோய் ஏற்பட்டது. ஓராண்டு கழித்து சரத்தின் 70 வயது தந்தைக்கும் சர்க்கரை நோய் ஏற்பட்டது. இந்தியாவில் ஏராளமானோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு வருகின்றது. வயது வித்தியாசம் இன்றி சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
சர்க்கரை நோய்
1995ம் ஆண்டு இந்தியாவில் 1 கோடியே 90 லட்சத்து 4 ஆயிரம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 19 ஆண்டுகளில் அதாவது 2014ல் இந்த எண்ணிக்கை 6 கோடியே 60 லட்சத்து 8 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர்.
பலி
2000ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை சர்க்கரை நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 27 ஆயிரத்து 300 ஆக அதிகரித்தது. இந்தியர்களை கொல்லும் முதல் 10 நோய்கள் பட்டியலில் சர்க்கரை நோயும் இடம்பிடித்துவிட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்போது பலியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்கள்
இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் சர்க்கரை நோய் தாக்கி வருகிறது. கிராமங்களை விட நகரங்களில் வசிப்போரை சர்க்கரை நோய் அதிகம் தாக்குகிறது. சென்னை, கொச்சி, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 5ல் ஒரு பெரியவருக்கு சர்க்கரை நோய் உள்ளது.
வகை
டைப் 1 மற்றம் டைப் 2 என சர்க்கரை நோய் இரண்டு வகை உள்ளது. டைப் 1 வகையில் நம் உடலில் இன்சுலின் சுரக்காமல் போவதால் இன்சுலின் ஊசி போட வேண்டும். வளர்ந்த நாடுகளில் 85 முதல் 95 சதவீதம் பேருக்கு டைப் 2 சர்க்கரை நோய் உள்ளது. இந்த வகை நோயை மாத்திரை மூலம் கட்டுப்படுத்தலாம்.
மரபணு
இந்தியர்களின் உடலில் சதையைவிட கொழுப்பு அதிகம் உள்ளது. இதனால் சாதாரணமாக இருக்கும் நபர் கூட பருமன் உள்ளவராக கருதப்படுகிறார். உடல் பருமனால் அவதிப்படுவோரை சர்க்கரை நோய் எளிதில் தாக்கும்.
பெற்றோர்
பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அந்த குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் உள்ள தந்தை, தாய்க்கு பிறந்த குழந்தைகளில் 55 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டது சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. அதுவே சர்க்கரை நோய் இல்லாத பெற்றோரின் பிள்ளைகளில் 15.6 சதவீதம் பேருக்கு தான் அந்த நோய் ஏற்பட்டுள்ளது.
உலகமயமாக்கல்
உலகமயமாக்கல் மற்றும் நகர வாழ்க்கையால் இந்தியாவில் ஏராளமானோருக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று சென்னையைச் சேர்ந்த டாக்டர் வி.மோகன் தெரிவித்துள்ளார். நாம் மேற்கத்திய முறைகளை பின்பற்றி சாப்பிடுகிறோம். அவர்களை போன்று வாழ்ந்து வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பீட்சா
சப்பாத்தி, குர்மாவை விட்டுவிட்டு பீட்சா, பர்கர் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவு வகைகளையே இந்தியர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். நகரங்களில் வசிப்போரில் 32 சதவீதம் பேர் சக்திக்காக தினமும் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிடுகிறார்கள்.
உடற்பயிற்சி
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டு எங்கு சென்றாலும் கார், பைக்கை பயன்படுத்துவது. நடைபயிற்சி என்பதை பலர் மறந்து வருகின்றனர். வீட்டு வேலைகளை செய்ய ஆட்கள் வைத்துக் கொள்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவற்றால் நம் உடல்நலத்தை நாமே கெடுத்துக் கொள்கிறோம். சுருக்கமாக கூறினால் சர்க்கரை நோயை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.
சுற்றுச்சூழல்
நம் வாழ்க்கை முறையால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலால் 80 சதவீதமும், மரபணுக்களால் 20 சவீதமும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று போர்டிஸ் சென்டர் ஆப் எக்சலன்ஸ் பார் டயாபெடிக்ஸ் தலைவர் அனூப் மிஸ்ரா கூறுகிறார்.
உணவுக் கட்டுப்பாடு
உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றால் மருந்துகள் இல்லாமல் அல்லது குறைந்த அளவு மருந்து மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். புனேவைச் டேர்ந்த சுப்பிரமணியன் சர்மாவுக்கு(55) 32 வயதில் சர்க்கரை நோய் ஏற்பட்டது. அவர் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நல்லதையே நினைப்பது உள்ளிட்டவையால் இன்சுலின் ஊசி இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
உடல் பருமன்
எனக்கு உடல் பருமன் இருந்தது. நான் நன்றாக சாப்பிடுவேன். மேலும் மன அழுத்தத்தில் இருந்தேன். என் பெற்றோருக்கு சர்க்கரை நோய் இல்லாத போதிலும் எனக்கு அந்த நோய் வந்தது. சர்க்கரை நோய் தீவிரமடைந்து நான் தினமும் 4 முறை இன்சுலின் ஊசி போட வேண்டி இருந்தது. இந்நிலையில் 2013ம் ஆண்டு ஃப்ரீடம் ஃபிரம் டயாபெடிக்ஸ் என்ற நிகழ்ச்சி பற்றி அறிந்து அதில் சேர்ந்தேன் என்கிறார் சர்மா.
இன்சுலின்
ஃப்ரீடம் ஃபிரம் டயாபெடிக்ஸ் நிகழ்ச்சியில் சேர்ந்த 5 வாரங்களில் நான் இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தினேன். 12 வாரங்களில் சுத்தமாக மருந்துகளை நிறுத்திவிட்டேன். மேலும் நான் 23 கிலோ எடையை குறைத்தேன் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் சர்மா.
விழிப்புணர்வு
சர்க்கரை நோய் பற்றி இந்தியர்களிடம் விழிப்புணர்வு இல்லை. இந்திய மக்கள் தொகையில் 43.2 சதவீதம் பேருக்கு மட்டுமே சர்க்கரை நோய் பற்றி தெரிந்துள்ளது. சர்க்கரை நோய் விழிப்புணர்வு பற்றி சன்டிகர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் பாதிப் பேருக்கு சர்க்கரை நோயை தடுக்கலாம் என்பதும், அது வந்தால் பிரச்சனை என்பதும் தெரிந்துள்ளது. அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிகம் விழிப்புணர்வு உள்ளது.
டைப் 2
சர்க்கரை நோய் ஏற்பட்டால் காலம் செல்லச் செல்ல மோசம் ஆகும். ரத்த பரிசோதனை மேலும் அதிக தாகம், பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் மூலம் டைப் 2 சர்க்கரை நோயை கண்டுபிடிக்கலாம். டைப் 2 சர்க்கரை நோயை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சிகிச்சை
மாத்திரைகள் மட்டும் எடுத்துக் கொள்வதால் செலவும் குறைவு. மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கு தான் அதிகம் செலவாகிறது. அதிலும் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும். காலில் பிரச்சனை ஏற்படுவதால் தான் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் செலவாகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.