இனி ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய 139க்கு போன் செய்தால் போதும்
டெல்லி: முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை இனிமேல் 139 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு எளிதில் ரத்து செய்யலாம்.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் போன் மூலம் டிக்கெட்டை ரத்து செய்யும் முறையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று துவக்கி வைத்துள்ளார்.
ரயில் பயண டிக்கெட்டுகளை கவுண்டருக்கே சென்று ரத்து செய்யும்பட்சத்தில் கால விரயம் ஏற்பட்டு வந்தது. கால் வலிக்க வரிசையில் நின்று டிக்கெட் பதிவு செய்த பின்னர் அதை ரத்து செய்யவும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருந்தது.
இந்தக் கஷ்டத்தைப் போக்க '139' என்ற எண்ணுக்கு அழைத்து டிக்கெட்டை ரத்து செய்யும் எளிய வசதியை கடந்த மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். இந்த திட்டத்திற்கான பணிகள் நிறைவடைந்து உள்ள நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் பிரபு, 'இந்த புதிய திட்டத்தின் படி, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள், தங்களது டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றால், '139' என்ற எண்ணுக்கு தொலைபேசியில் அழைத்து ரத்து செய்ய வேண்டிய டிக்கெட் பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அப்போது, அந்த பயணிக்கு ஒன் டைம் பாஸ்வேர்டு வழங்கப்படும். பின்னர் அந்த பாஸ்வேர்டை ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் கொடுத்து, டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெறலாம் என்று கூறினார்.
உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் கிளம்புவதற்கு 4 மணி நேரத்திக்கு முன்பு ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், ரத்துக்கான டிக்கெட் கட்டணம் கிடைக்காது என்ற திருத்தமும் கடந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.