ஆந்திர அரசுக்கு அடித்தது ஜாக்பாட்.. கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிப்பு!
ஆந்திராவில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திராவில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துங்கிலி மண்டலம் சென்னம்பள்ளியில் பழமை வாய்ந்த கோட்டை உள்ளது. அரவீடு திம்மராஜா என்பவர் 100 ஏக்கர் பரப்பளவில் மலையை குடைந்து இந்த சென்னம்பள்ளி கோட்டையை 16ம் நூற்றாண்டில் கட்டினார்.
அவரது காலத்திற்கு பிறகு குத்திராஜா, விஜயநகர அரசர்கள் ஆட்சியின் கீழ் இந்த கோட்டை இருந்ததாகவும், போர்ச்சுகீசியர்கள் போர் தொடுத்து வந்தபோது, மன்னர்கள் இந்த கோட்டையின் கீழ் உள்ள சுரங்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரியங்கள் அடங்கிய புதையலை பதுக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
புதையல் குறித்து தகவல்
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த புதையலை எடுக்க பலர் முயற்சி செய்தும் முடியவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநில தொல்லியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கோட்டையில் புதையல் இருப்பதாக அரசுக்கும் தெரிவித்தனர்.
தேடுதல் வேட்டை
இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம்தேதி புதையலை எடுக்க தொல்லியியல் துறை திட்ட இயக்குனர் விஜயகுமார், சுரங்கத்துறை உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் கர்னூல் மாவட்ட எஸ்.பி. கோபிநாத் ஜெட்டி தலைமையில் அதிகாரிகள் புதையல் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
3 இடங்களில் சுரங்கம்
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக புதையலுக்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. புதையலை எடுப்பதற்காக சென்னூர் கோட்டையை சுற்றிலும் 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது.
யானை தந்தம், குதிரை எலும்பு
இதில் யானைகளின் தந்தம், குதிரைகளின் எலும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. தந்தங்களும், எலும்புகளும் எந்த காலத்தை சேர்ந்தவை என தொல்லியியல் துறை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
வைரமலை கண்டுபிடிப்பு
இதைத்தொடர்ந்து கிணறு வழியாக ஸ்கேனர் கருவிகளை கொண்டு அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர். இதில் கோட்டைக்கு செல்லும் வழியில் இருந்த தர்கா அருகே மலைப்பகுதியில் வைர மலை இருப்பது தெரியவந்துள்ளது.
உயரமான வைரமலை
இந்த தகவலை சுங்கத்துறை உதவி இயக்குநர் நடராஜன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். மேலும் இந்த வைர மலை 12 மீட்டர் உயரத்துக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அனுமதியை பெற்று இந்த வைர மலையில் இருந்து வைரத்தை பிரித்தெடுக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திக்குமுக்கில் ஆந்திர அரசு
புதையலை தேடிச்சென்ற நிலையில் வைரமலையே கிடைத்திருப்பது ஆந்திர அரசை திக்குமுக்காட செய்துள்ளது. வைர மலை உள்ள பகுதியை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.