தேசிய விருதுகளை திருப்பி அளித்த படைப்பாளிகள்: புனே திரைப்படக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
புனே: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ள நிலையில், முக்கிய சினிமா படைப்பாளிகள் 10 பேர் தங்களது தேசிய விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர். சாகித்யா அகாடெமி விருதுகளை திருப்பி அளித்தது போல தேசிய விருதுகள் திருப்பி அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுயாட்சி அதிகாரம் கொண்ட புனே திரைப்படக் கல்லூரியின் தலைவர் பதவிக்கு நடிகர் கஜேந்திர சவுகான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். இவர் ‘மகாபாரதம்' நெடுந்தொடரில் தருமனாக நடித்தவர். இதற்கு முன்னர் இந்தத் திரைப்படக் கல்லூரியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் சிறந்து விளங்கியவர்கள்.
இவர் மத்திய அரசை ஆளும் பாஜகவின் உறுப்பினர் என்பதைத் தவிர இவருக்கு வேறு எந்த தகுதியும் இல்லை என்பது மாணவர்களின் புகாராகும். திரைப்படத் துறையின் எல்லாத் துறைகளிலும் அனுபவம் பெற்றவர் என்றோ நிபுணர் என்றோ பெயரெடுத்தவர் அல்ல என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுயாட்சி அதிகாரம் உள்ள பதவிகளுக்குத் தலைவர்களை நியமிக்கும்போது, அத்துறையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அவர்கள் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று பரிசீலித்து, பொருத்தமானவர்களை நியமிக்க வேண்டும் என்று கூறிய மாணவர்கள், நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக 136 நாட்கள் போராடினர். எனினும் படிப்பைக் கருத்தில்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த அவர்கள், தங்களது போராட்டமானது அமைதியான வெவ்வேறு வடிவங்களில் தொடரும் என்றும் கூறினர்.
இந்த நிலையில் திவாகர் பானர்ஜி, ஆனந்த பட்வர்தன், பரேஷ் கம்தார், நிஷிதா ஜெயின், கீர்த்தி நக்வா, ஹர்ஷவர்தன் குல்கர்னி, ஹரி நாயர், ராகேஷ் சர்மா, இந்திரநீல் லாஹ்ரி மற்றும் லிபிகா சிங் தாராய் ஆகிய படைப்பாளிகள் தங்கள் படங்களுக்காக பல்வேறு காலங்களில் பெற்ற தேசிய விருதுகளைத் திருப்பி அளித்து, இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளனர்.
தேசிய விருதுகளைத் திருப்பி அளித்த படைப்பாளிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், "நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கருத்துரிமையையும் காத்திடுவதற்கு உறுதியேற்க வேண்டியது இந்திய அரசின் உடனடி கடமையாகும். தேசத்தின் உயரிய இலக்கிய விருதைத் திருப்பி அளித்த படைப்பாளிகளின் வழியை நாங்களும் பின்பற்றி, எங்களது தேசிய விருதுகளைத் திருப்பித் தருகிறோம்.
திரைப்படப் படைப்பாளிகளாக, திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பின்னால் உறுதியுடன் நின்று, அவர்களின் போராட்டச் சுமையை உறுதியுடன் கைவிடாமல் இருக்க துணை நிற்கிறோம். அவர்களது சரித்திரப் போராட்டங்களை முன்னெடுக்க துணைபுரிகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.