நாராயண் சாய்க்கு கள்ளக்காதலிகள் மூலம் 2 மகன்கள் உள்ளனர்: ஆசாராமின் மருமகள் திடுக் தகவல்
அகமதாபாத்: சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு கள்ளத்தொடர்புகள் மூலம் 2 மகன்கள் உள்ளதாக சாயின் மனைவி ஜானகி தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபு கடந்த 2013ம் ஆண்டில் இருந்து ஜோத்பூர் சிறையில் உள்ளார். பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட அவரின் மகன் நாராயண் சாய் 2013ம் ஆண்டில் இருந்து சூரத் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் சாயை கடந்த 1997ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகக் கூறும் ஜானகி ஹர்பால்னி(38) என்ற பெண் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கும், நாராயண் சாய்க்கும் கடந்த 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்ததில் இருந்தே அவருக்கு பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. 2 கள்ளக்காதலிகள் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சாயை நான் பிரிந்த பிறகும் அவரது ஆட்கள் என்னையும், என் குடும்பத்தாரையும் மிரட்டி வருகிறார்கள். அவருடன் வாழ்ந்த காலத்தில் அவர் என்னை கொடுமைப்படுத்தியது மற்றும் ஜீவனாம்சம் கேட்டு நான் வழக்குகள் தொடர்ந்துள்ளேன்.
அந்த வழக்குகளை வாபஸ் பெறுமாறு அவரின் அடியாட்கள் என்னை மிரட்டி வருகிறார்கள். சாயும், அவரது தந்தையும் அடியாட்கள் மூலம் என்னை மனதளவில் சித்ரவதை செய்து வருகிறார்கள். அதனால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.