இது காங்கிரஸுக்கு வெற்றியே அல்ல.. இன்னும் கடுமையாக உழைத்தாக வேண்டும்!
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கடுமையாக போராட வேண்டி உள்ளது.
போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் "வெற்றி" என்பதை மார் தட்டி சொல்லி கொள்ள முடியுமா?
இப்படி விடிய விடிய ஓட்டு எண்ணியும் அப்படியும் ஒரு முடிவுக்கு வராமல் 3-வது ஆள் உள்ளே நுழைந்து உதவி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாயாவதி ஆதரவு தருவார் என்றே வைத்து கொள்வோம். அப்படியானால் இந்த வெற்றி யாருக்கு போய் முழுமையாக சேரும்? மாயாவதிக்கா? காங்கிரசுக்கா?
பகுஜன் சமாஜ்
மாயாவதியால்தான் மத்திய பிரதேசத்தில் ஆட்சி பிடிக்க முடிந்தது என்று பகுஜன் சமாஜ் மார் தட்டி கொள்ளட்டும். ஆனால் காங்கிரஸ் ம.பி, வெற்றியை முழுமையாக அனுபவிக்க முடியுமா?
தற்காலிகம்
ஏனெனில் ராஜஸ்தான் போல அல்ல இந்த மாநிலம். இங்கு சரிக்கு சரியாக பாஜகவும் வந்துள்ளது. இப்போது தற்காலிகமாக பாஜகவை வீட்டுக்கு அனுப்ப நினைக்கலாமே தவிர இதை ஒரு முழு வெற்றியாக காங்கிரஸ் கொண்டாட முடியாது.
நுழைவது கடினம்
ஏனெனில் அன்று காங்கிரஸ் கட்சியின் எக்கு கோட்டை என்று கருதப்பட்ட மாநிலம்தான் மத்தியபிரதேசம். கடந்த 2003-ல் அந்த எண்ணம் தவிடு பொடியானது. அப்போதிலிருந்து ஒன்றல்ல, இரண்டல்ல, 15 வருஷங்கள் உள்ளேயே காங்கிரசால் நுழைய முடியவில்லை. இப்போதும்தான்!!
நெருக்கடி
இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தாலும், காங்கிரஸ் கட்சியைவிட கூடுதலான வாக்கு சதவீதத்தைதான் பெற்றிருக்கிறது. ஒருவகையில் இது காங்கிரசுக்கு தோல்விதான். எனவே 3 முறை விடாமல் ஆட்சி செய்த பாஜக, இந்த முறையும் இவ்வளவு நெருக்கடி தருகிறது என்றால், நிச்சயம் இது காங்கிரசுக்கு வெற்றி கிடையாது.
வெற்றியே கிடையாது
எனவே இதை வைத்தும் வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலை முடிவு செய்ய முடியாது. ஒட்டுமொத்தத்தில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் செய்ய வேண்டியதும், சாதிக்க வேண்டியதும், இன்னும் நிறைய உள்ளதால், இப்போது கிடைத்துள்ளது "வெற்றி"யே கிடையாது என்பதே உண்மை!!