சரணடைய விரும்பி என்னிடம் பேசினார் நிழல் தாவூத்: ராம்ஜெத்மலானி பரபரப்பு தகவல்
டெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முதல் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தம்மை தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு வந்து வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார் என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
1993ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. மும்பையை உருக்குலைக்கும் வகையில் 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட இக்குண்டுவெடிப்புகளில் 257 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த நாசவேலையின் மூளையாக இருந்தது நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்தான். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவை தப்பி ஓடிய தாவூத் தற்போது பாகிஸ்தானின் கராச்சி நகரில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கராச்சியில் தாவூத் இப்ராஹிமை இந்திய உளவுத்துறை அதிகாரிகள் சில முறை நெருங்கிய போதும் இந்தியாவில் இருந்து சில அரசியல் தலைவர்களின் உத்தரவுகளால் கைது செய்ய முடியவில்லை என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருவரான டெல்லியின் முன்னாள் போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் தாம் எழுதி வரும் புத்தகம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில், தாவூத் சரணடைய விரும்பியதாகவும் இது தொடர்பாக தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தார். பின்னர் அவரே இதனை மறுத்தும் இருந்தார்.
இதனிடையே சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குநரான சாந்தனு சென், தாவூத் சரணடைய விரும்பி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான்.. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை தாவூத் விதித்திருந்தார். இதனால் சி.பி.ஐ. அதை ஏற்கவில்லை என்று உறுதி செய்திருக்கிறார்.
ராம்ஜெத்மலானி தகவல்
இதேபோல் மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியும் தாவூத் இந்தியா வந்து வழக்கை எதிர்கொள்ள விரும்பியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியிருப்பதாவது:
நான் லண்டனில் இருந்த போது தாவூத் என்னை தொடர்பு கொண்டு பேசினார். என் மீது போடப்பட்டிருப்பது பொய்வழக்கு என்பதால் அதனை எதிர்கொள்ள தயார் என்றும் என்னிடம் கூறினார்.
மேலும் இந்தியாவில் என்னை நீங்கள் சிறையில் பார்க்க மாட்டீர்கள்... வீட்டுச் சிறையில்தான் பார்ப்பீர்கள் என்றும் என்னிடம் தாவூத் கூறினார். இது தொடர்பாக அப்போதைய மகாராஷ்டிரா அரசுக்கும் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனால் மகாராஷ்டிரா அரசியல்வாதிகள் தாவூத் இப்ராஹிமின் இந்த கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்துவிட்டனர்.
இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.
மவுனம் காக்கும் சரத்பவார்
1990களில் மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். அவரிடம் தாவூத் இப்ராஹிம் சரணடைய விரும்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.