மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்கை தெரிந்து கொண்டு மோகன்லால் குவைத்தில் ரூ.3,300 கோடி முதலீடு?
திருவனந்தபுரம்: மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்கை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளிநாட்டில் ரூ.3 ஆயிரத்து 300 கோடி முதலீடு செய்ததாக சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததற்கு தனது பிளாக்கில்(Blog) ஆதரவு தெரிவித்திருந்தார் மலையாள நடிகர் மோகன்லால்.
மோகன்லாலின் பிளாக்கை பார்த்த பலரும் அவரை கடுமையாக விமர்சித்ததுடன், கிண்டல் செய்யத் துவங்கினர்.
டிரைவர்
உங்களிடம் டிரைவராக இருந்த ஆண்டனி பெரும்பாவூர் ஒருவர் கோடிக் கணக்கில் பணம் போட்டு படம் தயாரிக்கிறார். அப்படி என்றால் உங்கள் ஆட்களிடம் தான் கறுப்பு பணம் அதிகம் உள்ளது என்று ஆளாளுக்கு மோகன்லாலை வசை பாடினர்.
மோகன்லால்
மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பது குறித்து முன்கூட்டியே அறிந்து மோகன்லால் குவைத்தில் உள்ள பெட்ரோலிய நிறுவனம் ஒன்றில் ரூ.3 ஆயிரத்து 300 கோடி முதலீடு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
குவைத் நாளிதழ்கள்
வெளிநாட்டில் மோகன்லால் ரூ.3 ஆயிரத்து 300 கோடி முதலீடு செய்துள்ளது குறித்து குவைத்தை சேர்ந்த நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளனவாம். மேலும் முதலீடு செய்த பணத்திற்கு லால் கணக்கும் காட்டவில்லை, வரியும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
தகவல்
மோகன்லாலின் முதலீடு குறித்து வழக்கறிஞர் ஜஹான்கீர் பாலயில் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படங்களில் நடித்து மோகன்லாலுக்கு இத்தனை கோடி கிடைத்ததா, இருக்கவே இருக்காது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
வரி
வெளிநாடுகளில் கிடைத்த பணம் என்றால் அதற்கு எதற்கு மோகன்லால் இந்தியாவில் வரி செலுத்த வேண்டும் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இந்த முதலீடு விவகாரம் குறித்து மோகன்லால் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.