லலித் மோடிக்காக பிரிட்டன் அரசிடம் பேசவே இல்லை... ராஜ்யசபாவில் 'மனிதாபிமான' சுஷ்மா அந்தர் பல்டி!
டெல்லி: ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி வெளிநாடு செல்வதற்கு வசதியாக அவருக்கு விசா வழங்கும்படி பிரிட்டன் அரசிடம் நான் கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை; இந்த விவகாரத்தில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜ்யசபாவில் தெரிவித்தார். இதே சுஷ்மா ஸ்வராஜ் முன்னர் மனிதாபிமான அடிப்படையில்தான் லலித் மோடிக்கு உதவியதாக கூறியிருந்த நிலையில் ராஜ்யசபாவில் அந்தர்பல்டி அடித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் சுஷ்மா பேசியதாவது:
லலித் மோடி விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் என் மீது சுமத்தும் அனைத்துச் குற்றச்சாட்டுகளுக்கும் சபையில் உரிய விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளே, ராஜ்யசபா பாஜக தலைவர் அருண் ஜேட்லி மூலம் தெரிவித்தேன்.
இந்த விவகாரம் குறித்து இன்று விளக்கம் அளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில், கடந்த 2 வாரங்களாக தினமும் அவைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். லலித் மோடி வெளிநாடு செல்வதற்கு வசதியாக அவருக்கு விசா வழங்கும்படி பிரிட்டன் அரசிடம் நான் கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை என்றார்.
ஆனால் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்குச் சென்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபையின் துணைத் தலைவர் குரியன் நண்பகல் 12 மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆனந்த் சர்மா பேசுகையில், மத்திய அரசின் ஆணவப் போக்கால், சபையை நடத்த முடியாத இக்கட்டான நிலை நீடிக்கிறது. லலித் மோடி விவகாரம், மத்தியப் பிரதேச தொழில் கல்வி தேர்வு வாரிய முறைகேடு விவகாரம் ஆகியவை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உரிய விளக்கம் அளிக்காத வரை, சபை நடைபெற வாய்ப்பில்லை. ஆனால், நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவது குறித்து மத்திய அரசு கவலை கொள்வதாகத் தெரியவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட குரியன், குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பான விவாதத்தை நீங்கள் தொடங்காதபட்சத்தில், அவற்றைப் பற்றி பிரதமர் பதிலளிக்க முடியாது' என்றார்.
உடனே, அருண் ஜேட்லி, லலித் மோடி விவகாரம் தொடர்பான விவாதத்தை தொடங்க, காங்கிரஸ் உறுப்பினர்கள் தயாராக இல்லை என்றால், சுஷ்மா ஸ்வராஜ், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து விவாதத்தைத் தொடங்கி வைப்பார்' என்றார்.
ஆனால் இதே சுஷ்மா ஸ்வராஜ் முன்னர், மனிதாபிமான அடிப்படையில்தான் லலித் மோடிக்கு உதவியிருந்ததாக கூறியிருந்தார். தற்போது அப்படியே திடீர் பல்டி அடித்து உதவவே இல்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.