ஜவஹர்லால் நேரு பல்கலையிலிருந்து யாரையும் வேலைக்கு எடுக்க மாட்டோம் என டாடா சொன்னாரா?
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் யாரையும் இனி வேலைக்கு எடுக்கப்போவதில்லை என தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியதாக வெளியான தகவலை டாடா குழுமம் மறுத்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, குமார் இந்தியாவுக்கு எதிராக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இனி வரும் காலங்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து எந்தவொரு மாணவனையும் தங்களது டாடா குழுமம் பணிக்கு எடுத்துக் கொள்ளாது என அந்நிறுவனத்தின் தலைவர் டாடா, மும்பையில் நடைபெற்ற மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.
இதற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பியது. அதனைத் தொடர்ந்து டாடா குழுமம் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை இனி வேலைக்கு எடுத்துக் கொள்ள மாட்டோம் என தாங்கள் ஒருபோதும் கூறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.