விமானத்தில் ஸ்ருதி ஹாஸன் என்னுடன் சண்டை போட்டாரா?: ஆந்திரா அமைச்சர் விளக்கம்
ஹைதராபாத்: விமானத்தில் எனக்கும், நடிகை ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே எந்தவித தகராறும் நடக்கவில்லை என்று ஆந்திர மாநில அறநிலையத் துறை அமைச்சர் மாணிக்யால ராவ் தெரிவித்துள்ளார்.
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாஸன். புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரம் வெட்டியதாக போலீசார் 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற இடத்திற்கு அருகே உள்ள தலைக்கோணம் நீர் வீழ்ச்சி பகுதியில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பிற்காக அங்கு ரூ.1 கோடி செலவில் அரங்கு அமைத்துள்ளனர்.
திருப்பதி
படப்பிடிப்பிற்கு இடையே ஸ்ருதி ஹாஸன் ஹைரதாபாத் சென்று அங்கிருந்து விமானத்தில் திருப்பதி சென்றார். விமானத்தில் அவருக்கு பின்னால் பாஜகவைச் சேர்ந்த ஆந்திர மாநில அறநிலயைத் துறை அமைச்சர் மாணிக்யால ராவ் செல்போனில் சப்தம்போட்டு பேசியதாகவும், இதனால் கடுப்பான ஸ்ருதி அவரை திட்டி போனை வைக்குமாறு கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
அமைச்சர்
விமானத்தில் நடந்தது என்ன என்பது பற்றி அமைச்சர் ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், நான் விமானத்தில் செல்கையில் எஸ்.எம்.எஸ். வந்தது. எடுத்துப் பார்த்துவிட்டு கட்சிக்காரர் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி பேச டாக்டருக்கு போன் செய்தேன்.
ஸ்ருதி
நான் செல்போனில் சப்தமாக பேசியதை பார்த்த ஸ்ருதி கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்றார். நான் முக்கியமான விஷயம் பற்றி பேசியதால் ஸ்ருதிக்கு சைகை காட்டிவிட்டு பேசினேன். இதையடுத்து அவர் விமான பணிப்பெண்ணை அழைத்து என்னிடம் மெதுவாக பேசுமாறு கூறுங்கள் என்றார்.
செல்போன்
விமானப் பணிப்பெண் என்னிடம் வந்து மெதுவாக பேசுமாறு கூறினார். அவருக்கும் நான் சைகை காட்டிவிட்டு என் பேச்சைத் தொடர்ந்தேன். 2 நிமிடம் மட்டும் பேச அனுமதி அளியுங்கள் என்று அவரிடம் நான் சைகை மூலம் தெரிவித்தேன்.
சுவிட்ச் ஆப்
மருத்துவரிடம் 2 நிமிடம் பேசி முடித்த பிறகு நான் என் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். விமானத்தில் எனக்கும், நடிகை ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே தகராறு எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.