நொய்டாவிற்கு யோகி சென்றதால்தான் இப்படி நடந்தது.. உ.பி பாஜகவை கலங்கவைத்த பல வருட சென்டிமென்ட்
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சென்ற வருடம் நொய்டா சென்றதால்தான், அம்மாநில இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சென்ற வருடம் நொய்டா சென்றதால்தான், அம்மாநில இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. நொய்டாவிற்கும், அம்மாநில முதல்வர்களுக்கும் இடையில் பெரிய வரலாறு இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக கட்சி மோசமாக தோல்வி அடைந்தது. இதில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் அமைத்த கூட்டணி காரணமாக வெற்றி கிட்டி இருக்கிறது. யோகி ஆதித்யநாத் பாரம்பரியமாக போட்டியிட்டு வந்த தொகுதியில் பாஜக கட்சி முதல்தடவை தோல்வி அடைந்து இருக்கிறது.
நொய்டா பிரச்சனை
உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் நொய்டா மட்டும் அம்மாநில முதல்வர்களுக்கு ஒத்துவராத ஒரு பகுதி ஆகும். எந்த ஒரு முதல்வர் அந்த பகுதிக்கு சென்றாலும் அடுத்த தேர்தலில் தோற்று விடுவார். தேர்தலில் தோற்பது மட்டும் இல்லாமல் அதற்கு அடுத்து அவர் முதல்வர் பதவிக்கு திரும்பவே முடியாமல் போய்விடும்.
எல்லோரும்
கடந்த 30 வருடமாக நொய்டாவிற்கு சென்ற எல்லா முதல்வர்களும் பதவி இழந்து இருக்கிறார்கள். மாயாவதி பதவி இழந்தார். அதேபோல் முலாயம் சிங் யாதவ் பதவி இழந்தார். இதன் காரணமாகவே அவரது மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருக்கும் போது நொய்டாவிற்கு செல்லவில்லை.
யோகி சென்றார்
ஆனால் யோகி ஆதித்யநாத் நொய்டாவிற்கு சென்று பார்வையிட்டார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் 24ம் தேதி மெட்ரோ திறப்பு விழாவிற்காக அவர் நொய்டாவிற்கு சென்றார். பிரதமர் மோடியும் இந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தார்.
தோல்வி அடைந்து இருக்கிறார்
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் மிகவும் வலுவாக இருந்த பாஜக கட்சிக்கு அதற்கு பின் பெரிய அடி விழுந்து இருக்கிறது. முதல்முறையாக யோகி ஆதித்யநாத்தை அவரின் பாரம்பரிய தொகுதி மக்களே தூக்கி வீசி இருக்கிறார்கள். நொய்டாவிற்கு சென்றதால்தான் இப்படி நடந்தது என்று பாஜக கட்சியினர் பேசிக் கொள்கிறார்கள்.