மம்தா சிஸ்டர்...உங்கள வங்காளம் மன்னிக்காது...பஞ்ச் கொடுத்த அமித்ஷா
ஹவுரா : மம்தாவை வங்காளம் மன்னிக்காது. அவர் கட்சி விரைவில் காலியாகும். அவர் தனித்து விடப்படுவார் என ஹவுராவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் 4 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாஜக.,வில் இணைந்து விட்டனர். இதனால் முதல்வரும் கட்சி தலைவருமான மம்தா, கடும் அதிர்ச்சியில் உள்ளார். மேற்கு வங்கத்திற்கு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவரது கட்சியில் இருந்து ஒவ்வொவராக விலகி செல்வது, அவருக்கு பேரிடியாக உள்ளது.
இதற்கிடையில் ஹவுராவில் இன்று பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மேடையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக.,வில் இணைந்த 4 முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வீடியோ கான்பிரசிங் மூலம் அமித்ஷா உரையாற்றினார்.
அப்போ உடம்பு சரியில்ல-னு சொன்னது சும்மாவா? - நிதிஷ் மிரட்டலுக்கு பணிந்த பாஜக
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி :
அப்போது அவர், ஜெய் ஸ்ரீ ராம் அவமதிப்பை மம்தாவின் கட்சி தொண்டர்கள் எதிர்க்கிறார்கள். இதனை பொறுத்துக் கொண்டு எவரும் அந்த கட்சியில் இருக்க மாட்டார்கள். வங்காளத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என நான் ரஜீப் பானர்ஜியிடம் கூறினேன்.
வங்காளம் மன்னிக்காது மம்தா :
பல தலைவர்கள் திரிணாமுல் காங்கிரசை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என மம்தா சிந்திக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 10 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறார். சகோதரி மம்தா உங்களை வங்காளம் மன்னிக்காது என்றார்.
விரைவில் வங்கத்தில் ராமராஜ்யம் :
தொடர்ந்து வங்காள மொழியில் பேசிய ஸ்மிருதி இரானி, நீங்கள் வேண்டுமானால் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை தடுக்கலாம். ஆனால் பிரதமர் மோடியின் தலைமையில் ராமர் கோயில் அமைந்தே தீரும். ராம ராஜ்யம் வங்காளத்தின் கதவுகளை தட்டும் என்றார். ஸ்மிருதி இரானியின் இந்த பேச்சை திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 4 தலைவர்களும் கைதட்டி ரசித்தனர்.
பிப்ரவரி 28 வரை தான் :
திரிணாமுல் காங்கிரஸில் முக்கிய தலைவராக இருந்த சுவேந்து அதிகாரி பேசுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியல்ல, தனியார் கம்பெனி. பிப்ரவரி 28 க்கு பிறகு இந்த கம்பெனி காலியாகும். அதில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றார். ரஜீப் பானர்ஜி கூறுகையில், நாங்கள் மேற்குவங்கத்தில் இரட்டை திறன் கொண்ட ஆட்சி அமைய விரும்புகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்றார்.