நான் சிறுபான்மையினருக்கு சலுகை காட்டுவதாக கூறுவது தவறு... மமதா பானர்ஜி விளக்கம்
கொல்கத்தா: சிறுபான்மையினருக்கு தனது அரசு கூடுதலாக சலுகை காட்டுவதாக கூற முடியாது. அப்படிப்பட்ட குற்றச்சாட்டு தவறு. எனது அரசு அரசியல் சட்ட கடமைகளை மட்டுமே செய்து வருகிறது என்று கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
மேற்கு வங்க சிறுபான்மையினர் அமைச்சகமும், மதராசா கல்வி நிறுவனமும் இணைந்து அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. கொல்கத்தாவில் நடந்த அந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கலந்து கொண்டார்.
அந்த விழாவில் அவர் பேசியதாவது :-
அரசியல் சாசன கடமைகள்...
சிறுபான்மை சமூகத்தினருக்கு கூடுதலாகவே எனது அரசு உதவுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இது தவறு. நாங்கள் அவர்களைக் கவருவதற்காக எதையும் செய்யவில்லை. அரசியல் சாசன கடமைகளை மட்டுமே எனது அரசு செய்து வருகிறது.
தவறான கருத்து...
சிறுபான்மையினர் நலனுக்கு மட்டுமே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக சிலர் கூறுகிறார்கள். நாங்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும். நிச்சயம் நான் அப்படி செய்ய மாட்டேன்.
புரிந்து கொள்ள வேண்டும்...
சிலருக்கு சிறுபான்மையினர் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஏதோ செய்கிறது. வங்காளிகள் பிற மாநிலங்களுக்குப் போனால் அவர்களும் அங்கு சிறுபான்மையினர்தான். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடமை...
பெரும்பான்மை சமூகத்தினர், சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உதவிக் கரம் நீட்ட வேண்டியது அவசியம். அது நமது கடமை.
கடுமையான நடவடிக்கை...
ஆனால் சிலரோ சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதையே வேலையாக கொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களின் முயற்சிகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கடுமையாக நடவடிக்கை எடுப்போம்' என இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார்.