சஞ்சய் தத்திடம் நான் எந்த ஆயுதத்தையும் கொடுக்கவில்லை.. அபு சலேம் வாக்குமூலம்
மும்பை: 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு முன்பாக நான் நடிகர் சஞ்சய் தத் வீட்டுக்கு சென்றதாகவும், அவரிடம் 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் கிரனேட் குண்டுகளைக் கொடுத்ததாகவும் கூறப்படுவது தவறு. நான் அப்படி எதையும் கொடுக்கவும் இல்லை, சஞ்சய் தத் வீட்டுக்குச் செல்லவும் இல்லை என்று அபு சலேம் கூறியுள்ளார்.
மும்பையில் உள்ள தடா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தபோது இவ்வாறு தெரிவித்தார் சலேம்.
1993 தொடர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் தத்துக்கு அந்த வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் மு்ம்பை தடா கோர்ட்டில் அபு சலேம் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தார். கிரிமில் சட்டம் 313வது பிரிவின்படி தாக்கல் செய்யப்பட்ட அந்த வாக்குமூலத்தில், அவர் தான் சஞ்சய் தத்தை அவரது வீட்டில் சந்தித்ததையும், அவரிடம் ஆயுதங்கள் வழங்கியதையும் மறுத்துள்ளார் சலேம்.
இந்த வழக்கில் அபு சலேம், ரியாஸ் சித்திக்கி, கரிமூல்லா கான், பெரோஸ் அப்துல் ரஷீத், தஹிர் மெர்ச்சன்ட், முஸ்தபா தோஸா ஆகியோர் தற்போது விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் 2006ம் ஆண்டு 100 பேருக்கு தடா கோர்ட் தீர்ப்பளித்தது. அதில் ஒருவரான யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சமீபத்தில் அது நிறைவேற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
தனது வாக்குமூலத்தில், தன்னை போர்ச்சுகலிலிருந்து நாடு கடத்திக் கொண்டு வந்து கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் சலேம் வாதிட்டுள்ளார்.
போர்ச்சுகலில் பதுங்கியிருந்த சலேமை இந்திய அதிகாரிகள் அங்கிருந்து கோர்ட் அனுமதியுடன் இந்தியாவுக்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர் அவர் மீது மரண தண்டனை விதிக்கத்தக்க வகையிலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்ததால், போர்ச்சுகல் கோர்ட், சலேமை நாடு கடத்துவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதையும் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் சலேம்.
போர்ச்சுகல் கோர்ட்டுக்குத் தவறான தகவல்களைக் கொடுத்து தன்னை அழைத்து வந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னை நாடு கடத்துவது தொடர்பாக தடா கோர்ட்டிலும் தவறான ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்ததாகவும் சலேம் குற்றம் சாட்டியுள்ளார்.