பண வீழ்ச்சியால் விண்ணை தாண்டும் எரிபொருள் விலை... பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78
டெல்லி: பண வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.02 ஆக உள்ளது. இதனால், இறக்குமதியாகும் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 78-ஆகவும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.69.46 -ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையை பொருத்தவரை ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.73.54 க்கு விற்பனையாகிறது. அதுபோல் பெட்ரோலின் விலை ரூ.81.09 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகளும் நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.