ஒன்னே முக்கால் மணிநேரம் மூச்சு திணறத் திணற பேசிய 'ரியல்' பவர்ஸ்டார்
ஹைதராபாத்: ஜனசேனா கட்சியை துவங்கிய பவர் ஸ்டார் பவன் கல்யாண் மூச்சு முட்ட முட்ட ஒன்னே முக்கால் மணிநேரம் பேசியுள்ளார்.
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக உள்ள சிரஞ்சீவியின் தம்பி 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் அண்ணன் வழியில் அரசியலில் குதித்துள்ளார். அவர் ஜனசேனா என்ற கட்சியை துவங்கியுள்ளார்.
கட்சியை துவங்கிய அவர் தனது ரசிக பெருமக்கள் முன்பு ஒன்னே முக்கால் மணிநேரம் மூச்சு முட்ட பேசிய உரையை நேரில் பார்த்தவர்களுக்கு ஒரு படம் பார்த்தது போன்று இருந்தது. அந்த உரையில் பிளாஷ்பேக், சென்டிமென்ட், காமெடி என்று அனைத்து வகையான மசாலாவும் இருந்தது.
உளறல்
படங்களில் எப்படி முக்கியமானவர்கள் மற்றும் முக்கியமானவை பற்றி மதிக்காமல் பேசுவாரோ அதே போன்றே பவன் மேடையில் ஏறி, முதல்வர், அமைச்சர் பதவிகள் எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை. அது எல்லாம் மக்கள் என் மீது காட்டும் அன்புக்கு முன்பு ஒன்றும் இல்லை. அரசியல்வாதிகள் தான் உலக மக்களில் போலியானவர்கள் என்றார்.
பிளாஷ்பேக்
மேடையில் பவன் தனது பிளாஷ்பேக்கை கூறினார். தான் சிறுவனாக இருந்தபோது தனது சொந்த ஊரில் தனது சகோதரிகள் உள்ளூர் ரவுடிகளால் கேலி செய்ததை கேட்டபோது என்ன உணர்வு ஏற்பட்டது, தான் படித்த அரசு பள்ளியில் போதிய புத்தகங்கள் இல்லாதது குறித்து எல்லாம் தெரிவித்தார். நடைமுறையில் இருந்த அமைப்புகளை பார்த்து தான் அதை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியது. என் அண்ணன் சிரஞ்சீவி சென்னையில் நடிகராக போராடியபோது அவரிடம் வம்பு இழுத்த சில ரவுடிகளுடன் நான் சண்டை போட்டேன் என்றார் பவன்.
குடும்ப சென்டிமென்ட்
தனது அண்ணன் சிரஞ்சீவிக்கு எதிராக திரும்ப எடுத்த முடிவால் தனக்கு என்னவெல்லாம் உணர்ச்சி பெருக்கு ஏற்பட்டது என்று ஃபீலிங்குடன் தெரிவித்தார் பவன். நான் இங்கு வருகிறேன் என்று என் குடும்பத்தார் யாருக்கும் தெரியாது. நான் இன்னும் இரண்டு நாட்களில் என் அம்மாவை சந்திக்க செல்வேன். அப்போது அவர் என்னை நிச்சயம் அடிப்பார். குடும்பமா, நாடா என்ற கேள்வியை என்னிடமே கேட்டுக் கொண்டேன். ஆனால் ஊழல் அரசியல்வாதிகள் நாட்டை கொள்ளையடிப்பதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது என்று ஆவேசம் பொங்க கூறினார் பவன்.
காமெடி
பிளாஷ்பேக், சென்டிமென்ட்டை அடுத்து காமெடிக்கு தாவினார் பவன். தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் தலைவர் ஹனுமந்த ராவ் போன்று மிமிக்ரி செய்தார் பவன். நீங்கள் உங்கள் பாட்டியிடம் இருந்து அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்திக்கு அட்வைஸ் வேறு செய்தார் பவன். போங்க பவன் எப்பவுமே உங்களுக்கு காமெடி தான்.
சீரியஸ்
காமெடியை அடுத்து சீரியஸாகிவிட்டார் பவன் கல்யாண். சீரியஸ் காட்சியிலும் பவன் காமெடி செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே. மேடையிலும் அதையே தான் செய்தார். தன்னை பகத் சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத்துடன் ஒப்பிட்டுக் கொண்டார். பகத் சிங் மற்றும் ஆசாத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். வாழ்வா, நாடா இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று வந்தால் நான் என் உயிரைக் கொடுக்க தயங்கவே மாட்டேன் என்றார்.