சசிகலாவிடமிருந்து சத்ய நாராயணா ரூ. 2கோடி லஞ்சம் வாங்கியது உண்மை.. ரூபா
சசிகலாவிடமிருந்து கர்நாடக சிறை துறை ஏடிஜிபி சத்யநாராயணா லஞ்சம் வாங்கியது உண்மைதான் என்று டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
Recommended Video
பெங்களூர் : சசிகலாவிடமிருந்து கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்யநாராயணா ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது என்றும் அவர் தொடுத்த மான நஷ்ட வழக்கை சந்திப்பேன் என்றும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து பரப்பன அக்ரஹார சிறையின் டிஐஜியாக இருந்த ரூபா புகார் கூறினார். இதுகுறித்து அவர் கடந்த ஜூலை மாதம் தனது உயரதிகாரிக்கு புகார் மனுவையும் அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், சசிகலாவுக்கு சிறையில் 4 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தனி சமையலறை உள்ளது. மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்படும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட சசிகலா அதிக அளவிலான பார்வையாளர்களை சந்தித்துள்ளார்.
லஞ்சப் புகார்
பார்வையாளர்களை மணிக்கணக்கில் சந்திப்பதற்கு தனி அறை என சிறையில் தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். இந்த விதிமீறல்களுக்கு சசிகலாவிடமிருந்து சிறைத் துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கு சசிகலா தரப்பு ரூ.2 கோடி பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
மானநஷ்ட வழக்கு
இந்த புகாருக்கு பிறகு ரூபா போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டார். இந்த புகாரை சத்யநாராயணா மறுத்துவிட்டார். மேலும் தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக ரூபா அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார் என்று கூறிய சத்யநாராயணா, ரூபாவுக்கு எதிராக மான நஷ்ட வழக்கை தாக்கல் செய்வேன் என்றார்.
ஒரு நபர் குழு அமைப்பு
தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களையே உலுக்கிய இந்த புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் கர்நாடக மாநில அரசு விசாரணை கமிஷனை ஏற்படுத்தியது. இதையடுத்து வினய்குமார் பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்தார்.
விதிமீறல் உண்மைதான்
அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு தனி சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சத்யநாராயணா தாக்கல் செய்த மான நஷ்ட வழக்கு குறித்து பெங்களூரில் ரூபா செய்தியாளர்களிடம் கூறுகையில் டிஜிபி சத்யநாராயணா சசிகலாவிடமிருந்து ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியது உண்மை. அதற்கான ஆதாரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன்.
லஞ்ச புகார்
சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்பட்ட சொகுசு வசதிகள் குறித்தே வினய்குமார் குழு விசாரணை நடத்தியது. ரூ.2 கோடி லஞ்சப் புகார் குறித்து விசாரணை நடத்தவில்லை. லஞ்ச புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார்தான் விசாரணை நடத்த வேண்டும். மான நஷ்ட வழக்கை சந்திப்பேன் என்றார் ரூபா.