நேர்மையான அதிகாரி இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம்- கொந்தளிக்கும் குமாரசாமி!
நேர்மையான டிஐஜி ரூபா இடமாற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூர்: பெங்களூர் சிறையில் நடைபெற்று வந்த ஊழல்கள் குறித்து உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய நேர்மையான டிஐஜி ரூபா இடமாற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த வாரம் சிறை துறை டிஐஜி ரூபா ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு அவர் அறிக்கை அனுப்பினார்.
அதில் கஞ்சா புழக்கத்தில் உள்ளதாகவும், கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அது அம்பலமானது என்றும் சசிகலாவுக்கு தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த வசதிகளை பெற சசிகலா சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயணராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் குழுவை முதல்வர் சித்தராமையா நியமித்தார்.
இன்று சிறையில் அந்த குழு ஆய்வு நடத்தி வரும் நிலையில், சிறையில் முறைகேட்டை அம்பலப்படுத்திய ரூபாவை வேறு துறைக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நேர்மையான அதிகாரியை இடமாற்றம் செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஊழலுக்கு முதல்வர் சித்தராமையா துணை போவது வாடிக்கையாகிவிட்டது.
ரூபாவின் இடமாற்றத்தை கண்டித்து எங்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர். இதேபோல் பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரூபா இடமாற்றம் குறித்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், சிறை முறைகேடு குறித்து நடுநிலையாக விசாரணை நடைபெறவே ரூபா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரி வினய் குமார் விசாரணையில் உண்மை தெரியவரும் என்றார்.