சசிகலாவை அம்பலப்படுத்திய ரூபா.. டிரான்ஸ்பர் செய்து சங்கடப்படுத்திய கர்நாடக அரசு!!
சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபாவை சிறைத் துறையிலிருந்து வேறொரு துறைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்படும் சிறப்பு வசதிகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா, பெங்களூர் நகர காவல் துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் சிறைத் துறை டிஐஜி ரூபா கடந்த வாரம் பரப்பன அக்ரஹார சிறைக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது அங்கு நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்தார்.
மேலும் சசிகலா அறையில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு தனி சமையலறையும், சசிகலாவை பார்வையாளர்கள் சந்திக்க சிறையில் தனி அறையும் இருப்பதையும் ரூபா கண்டறிந்தார்.
சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகளை ஏற்பாடு செய்ய சிறை டிஐிபி சத்தியநாராயணராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
டிஜிபிக்கு அறிக்கை
தான் பார்த்தவை குறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கையாக அனுப்பினார். இதனால் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியது. இதைத் தொடர்ந்து சிறை முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை குழுவை முதல்வர் சித்தராமையா நியமித்தார்.
ஆதாரங்கள் அழிப்பு
அதற்குள் சசிகலாவின அறையில் இருந்த சமையலறை இடிக்கப்பட்டதாகவும், சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் டிஐஜி ரூபா தனது 2-ஆவது கடிதத்தில் புகார் தெரிவித்தார். அதேவேளையில் டிஜிபி சத்தியநாராயண ராவும் நேற்று பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு மேற்கொண்டதால் ரூபாவுக்கு சந்தேகம் மேலும் வலுத்தது.
Recommended Video
ரூபா இடமாற்றம்
சிறையில் சசிகலா நடத்தும் தர்பார் குறித்து போட்டுடைத்த டிஐஜி ரூபாவை நகர போக்குவரத்து ஆணையராக இடம் மாற்றம் செய்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நேர்மையாக இருக்கும் ரூபா போன்ற அதிகாரிகளுக்கு இது நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
காங்கிரஸ் சப்பைக்கட்டு
ஊழலை அம்பலப்படுத்தியதாலும், விதிகளை மீறி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்ததாகவும் ரூபாவை இடமாற்றியதற்கு காங்கிரஸ் கட்சி உப்பு சப்பில்லாத ஒரு காரணத்தை கூறுகிறது. ரூபா இடமாற்றம் செய்யப்பட்டால்தான் விசாரணை நியாயமாக நடைபெறும் என்று காங்கிரஸ் விளக்குகிறது. அதற்குள் பதில் இந்த புகாரில் சிக்கிய அதிகாரிகளுக்கு விடுப்பு கொடுத்து அனுப்பியிருக்கலாமே.
கண்துடைப்பு
ஊழல் புகாருக்குள்ளான சத்தியநாராயண ராவையும் இடமாற்றி ஆளும் காங்கிரஸ் அரசு கண்துடைப்பு நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. நேர்மையான அதிகாரிகளுக்கு ரிவார்டுகளை விட டிரான்ஸ்பர்களே அதிகம் கிடைப்பது எந்த மாநிலத்துக்கு புதிதல்ல என்று நெறியாளர்கள் கருதுகின்றனர்.