வருகிறது டிஜிட்டல் கல்வி சான்றிதழ்... ஐஐடிகளில் முதல்கட்டமாக அமல்படுத்தப்படுத்த முடிவு
டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
டெல்லி: முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை உயர்கல்வி நிறுவனங்களில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
கல்வித்துறையில் அதிநவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு முயற்சியாக முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை உயர்கல்வி நிறுவனங்களில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2019ம் கல்வியாண்டு முதல் சோதனை முயற்சியாக இத்தகைய சான்றிதழை வழங்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஐஐடிகளில் இந்த முயற்சி அமல்படுத்தப்படும் என்றும், அடுத்தப்படியாக டில்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இந்த கல்வி சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் கண்காணிப்பில் பேரில் இந்த சோதனை பணிகள் நடத்தப்பட உள்ளதாகவும், இத்தகைய டிஜிட்டல் சான்றிதழ்கள் உறுதித்தன்மை வாய்ந்தாகவும், கல்வியை டிஜிட்டல் சங்கிலியாக இணைக்கும் ஒருமுயற்சி இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை செயல்பாடு வெற்றி பெற்றால், நாடு முழுவதும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே இமெயில்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
கல்வித்துறை ஏற்கனவே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால், அதில் இம்முறை அமல்படுத்துவது பிரச்சனை இருக்காது என்று கருதப்படுகிறது.
கல்வி துறையை தொடர்ந்து நில பட்டாக்கள் தொடர்பான ஆவணங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல மாநிலங்கள் இன்னும் டிஜிட்டல் முறைக்கு மாறாமல் இருப்பதால் , இதனை நடைமுறைபடுத்த பல காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.