அநீதிக்கு எதிராக போரடுகிறவர் ராகுல்.. ஆட்சி அதிகாரத்துக்காக போராடுபவர் அல்ல: திக்விஜய்சிங்!
பனாஜி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு ஆட்சி நடத்தும் நிர்வாகத் திறமை இல்லை என்று தாம் கூறியதாக வெளியான செய்திகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவுக்கு வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது காங்கிரஸ். இதற்கு ராகுல் காந்தியே காரணம் என்று மூத்த தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் ராகுல் காந்தியை மிகக் கடுமையாக தாக்கி பேட்டி கொடுத்திருந்தார். கோவாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த திக் விஜய் சிங், லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ளும் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றிருக்க வேண்டும். அவருக்கு இயற்கையாகவே ஆளும் நிர்வாகத் தகுதி என்பது இல்லை என்றார்.
திக்விஜய்சிங்கின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள திக்விஜய்சிங், நான் அப்படி கூறவில்லை, ராகுல் எப்போதுமே அநீதிக்கு எதிராக போராடுபவர்..ஆனால் ஆட்சி அதிகாரக்காக போராடுபவர் அல்ல. அதுதான் அவருக்கும் எங்களுக்கான வேறுபாடு என்றுதான் கூறினேன் என புது விளக்கம் அளித்திருக்கிறார்.
திக்விஜய்சிங் என்றாலே பஞ்சாயத்துதானோ!