பாஜகவை வீழ்த்த நக்சலைட்டுகள் காங்கிரஸில் சேர வேண்டும்- அழைப்பது திக்விஜய்சிங்
டெல்லி: பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியில் நக்சலைட்டுகள் சேர வேண்டும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.
கோவா மாநிலம் பனாஜியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திக்விஜய்சிங் பேசியதாவது:
நேபாள நாட்டில் மாவோயிஸ்டுகள் வன்முறைப் பாதையை கைவிட்டுவிட்டு, அரசியலில் ஈடுபட்டது போன்று, இந்தியாவிலும் நக்சலைட்டுகள் தேசிய உணர்வோட்டத்தில் இணைய வேண்டும். காங்கிரஸ் கட்சியை அவர்கள் சரியான கட்சியாக நினைத்தால் கட்சியில் சேரலாம்.
தேர்தல் பிரசாரத்தின்போது நக்சலைட்டுகள் வன்முறை என்னும் அரசியலை விட்டுவிட்டு ஜனநாயக அரசியலில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தேன். அதேபோல் மதவாதம், வன்முறை, வெறுப்பு அரசியலை அவர்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் நக்சலைட்டுகளை கேட்டுக் கொண்டேன்.
பாரதிய ஜனதாவை மனதில் கொண்டு, இந்தக் கருத்தை தெரிவித்தீர்களா எனக் கேட்கிறீர்கள். ஆமாம், அந்த கட்சியை மனதில் கொண்டே அந்தக் கருத்தைத் தெரிவித்தேன். ஏனெனில், அவர்கள்தான் மதம் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, வகுப்புக் கலவரத்தை தூண்டி விடுகின்றனர்.
கட்சியைவிட்டு யாராவது வெளியேற வேண்டும் என்று விரும்பினால், அவர்களை நாங்கள் தடுக்கமாட்டோம். ஆனால், அதேநேரத்தில் அரசியலில் இருப்பதற்கு ஒரு கொள்கை வேண்டும். கட்சியைவிட்டு வெளியேறினாலும், காங்கிரஸ் கட்சியின் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
காங்கிரஸில் இருந்து வெளியேறி, தனியாக பிராந்திய அளவிலான கட்சிகளை ஆரம்பிப்பதும், பின்னர் காங்கிரஸூக்கு திரும்பி வருவதும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்,.