திக் விஜய் சிங்கின் மகள் கார்னிகா புற்றுநோயால் மரணம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கின் மகள் கார்னிகா சிங், இன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 37.
திக்விஜய் சிங்கின் மகளான கர்னிகா, சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதற்கு முன்னதாக, வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்றுவந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறிவந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் நோயின் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து டெல்லி சாக்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 5 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கார்னிகாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்குக்காக அவரது உடல், குஜராத் மாநிலத்தில் உள்ள திக்விஜய் சிங்கின் சொந்த ஊரான வத்வானுக்கு இன்று பிற்பகல் கொண்டு செல்லப்பட்டது.
திக்விஜய் சிங்கின் முதல் மனைவியும், கார்னிகாவின் தாயுமான ஆஷாவும் புற்று நோயால் 2013ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.