குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை எந்த சங்கமும் வேண்டாம்... கும்பிடு போடும் திலீப்
குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை எந்த சங்கமும் வேண்டாம் என்று நடிகர் திலீப் கடிதம் எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம்: குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை எந்த சங்கத்திலும் இணைய போவதில்லை என்று நடிகர் திலீப் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ், மலையாளத்தில் முன்னணியில் இருந்த நடிகை ஒருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காரில் கடத்திச் செல்லப்பட்டு, ஒரு கும்பலால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கேரள போலீஸார் விசாரணை நடத்தி, பல்சர் சுனில் என்பவர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் திலீப்பை கேரள போலீஸார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி கைது செய்தனர். எனினும், 85 நாள்கள் சிறை தண்டனைக்குப் பிறகு, ஜாமீனில் நடிகர் திலீப் வெளியே வந்தார்.
நடிகர் சங்கம் நீக்கியது
இந்நிலையில் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்க (Association of Malayalam Movie Artistes (AMMA)) பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். காவல்துறையால் கைதானபோது அம்மா அமைப்பு திலீப்பை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியது.
நடிகர் சங்கம்
கடந்த 15 ஆண்டுகளாக அம்மா அமைப்பின் தலைவராக இன்னொசென்ட் பொறுப்பு வகித்தார். வயது காரணமாக அப்பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து அம்மா அமைப்பின் தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இதற்குப் பிறகு திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
4 பேர் விலகல்
இந்த நடவடிக்கைக்கு திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து நடிகர் சங்கத்தின் முடிவை எதிர்த்து ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை ஆகிய 4 பேரும் அம்மா சங்கத்திலிருந்து விலகியுள்ளார்கள்.
ரத்து செய்தது
இந்நிலையில் நடிகர் திலீப் நடிகர் சங்கத்துக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் நடிகர் சங்கத்தில் என்னை மீண்டும் சேர்க்க முடிவு செய்துள்ளதாக அறிந்தேன். என்னிடம் விளக்கம் கேட்காமல் என்னை வெளியேற்றிய தீர்மானத்தை நடிகர் சங்கம் ரத்து செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவமானப்படுத்துவது...
எனினும் எந்த தவறும் செய்யாமல் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறைவாசம் சென்றேன். எனவே நான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை எந்த சினிமா சங்கத்திலும் சேர விரும்பவில்லை. என்னை நடிகர் சங்கத்தில் சேர்த்ததால் அச்சங்கத்தை சிலர் வேண்டுமென்றே அவமானப்படுத்துவது வேதனையளிக்கிறது என்று கடிதம் எழுதியுள்ளார்.