''எச்சரிக்கையாக இருங்க.. கூச் பிகார் போன்ற சம்பவம் இன்னும் அதிகம் நடக்கலாம்''.. சொல்வது பாஜக தலைவர்
கொல்கத்தா: தேர்தல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மக்களைத் தூண்டியதற்காக மம்தா பானர்ஜி மீது வழக்குத் தொடர வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் சி.ஐ.எஸ்.எஃப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உள்ளூர் மக்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை (சி.ஐ.எஸ்.எஃப்) தாக்கியதால், சி.ஐ.எஸ்.எஃப் படையினர் வேறுவழியின்றி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
சி.ஐ.எஸ்.எஃப் படையினர் மத்திய அரசின் சொல் கேட்டு மக்களை சுட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார் இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மக்களைத் தூண்டியதற்காக மம்தா பானர்ஜி மீது வழக்குத் தொடர வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.
''மக்கள் சொன்னால் ராஜினாமா செய்கிறேன்; நீங்க வெளியேற ரெடியா இருங்க'' மம்தாவுக்கு, அமித்ஷா பதிலடி!
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ' தூசு செலே' (கெட்ட பையன்கள்) எங்கிருந்து வந்தார்கள்?இவர்கள் வங்காளத்தில் தொடர்ந்து இருக்க மாட்டார்கள். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. சிஐஎஸ்எஃப் துப்பாக்கிகளை நிகழ்ச்சிக்காக மட்டுமே எடுத்துச் செல்கிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.
யாராவது சட்டத்தை தனது கைகளில் எடுத்துக் கொண்டால், அவருக்கு பொருத்தமான பதில் கிடைக்கும். மத்திய படைகள் வாக்குச்சாவடிகளில் நிறுத்தப்படும், அவர்களை அச்சுறுத்த யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இன்னும் பல்வேறு இடங்களில் கூச் பிகார் போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று திலீப் கோஷ் தெரிவித்தார்.