இரட்டை இலை: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு மனுத் தாக்கல்- நாளை விசாரணை!
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் அணிக்கு ஒதுக்கியதை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டில் இன்று தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார்.
டெல்லி: அதிமுகவின் மதுசூதனன் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தினகரன் தரப்பில் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் 8 மாதங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுக கட்சி பெயர், கொடி ஆகியவையும் மதுசூதனன் தலைமையிலான அணி வசமானது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று தினகரன் தரப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அதிமுகவின் கணக்கு வழக்குகளை சசிகலா, தினகரன் தரப்பு ஆய்வு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இன்றைய மேல்முறையீட்டு மனுவில் இந்த உத்தரவையும் தினகரன் தரப்பு இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.