தினகரன் தரப்பு மலையளவு நம்பும் 'எடியூரப்பா வழக்கு'... நடந்ததும் தீர்ப்பும் இதுதான்!
எடியூரப்பா வழக்கின் தீர்ப்பைத்தான் மலைபோல நம்புகிறது தினகரன் முகாம்.
Recommended Video
டெல்லி: உச்சநீதிமன்றம் தங்களது தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் நிச்சயம் சாதகமான தீர்ப்பைத் தரும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதற்கு காரணமே எடியூரப்பா வழக்கின் தீர்ப்புதான்.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்குகளில் பிரதானமாக பேசப்படும் எடியூரப்பா வழக்கின் பின்னணிதான் என்ன? கர்நாடகாவில் 2010-ல் முதல்வராக இருந்தார் பாஜகவின் எடியூரப்பா.
அப்போது திடீரென 11 பாஜக எம்.எல்.ஏக்கள், 5 சுயேட்சைகள் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்த 16 எம்.எல்.ஏக்களும் தனித்தனியே மனுக்கள் அளித்தனர்.
அதில், பாஜகவில் தாங்கள் தொடர்ந்து நீடிப்பதாகவும் ஆனால் முதல்வர் எடியூரப்பாவை மட்டும் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதையடுத்து போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் போபையா தெரிவித்தார்.
இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றமோ, சபாநாயகர் போபையாவின் முடிவை கடுமையாக விமர்சித்தது. முதல்வர் எடியூரப்பா அரசைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே சபாநாயகர் இந்த தகுதி நீக்க அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தவிர தகுதி நீக்கத்துக்கு எந்த ஒரு காரணமும் இல்லை. எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என அதிரடியாக தீர்ப்பளித்தனர்.
கர்நாடகா பாணியிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். அவர்கள் தந்த மனுவின் வாசகங்கள் கூட, எடியூரப்பா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பயன்படுத்திய வாசகங்களே.
இதனால் தங்களது தகுதி நீக்கமும் ரத்தாகும் என்கிற பெருநம்பிக்கையுடன் உயர்நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பளிக்க 3-வது நீதிபதியிடம் வழக்கு மாற்றப்பட்டது.
இருப்பினும் கர்நாடகா எம்.எல்.ஏக்கள் வழக்கில் அளிக்கப்பட்ட அதே தீர்ப்பை எப்படியும் பெற வேண்டும் என்பதற்காக தற்போது உச்சநீதிமன்றத்தை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாடியுள்ளனர்.