திஹாரில் சோக மூடில் டிடிவி தினகரன்... அறையை விட்டு வெளியே வருவதேயில்லை!
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் அறையை விட்டு அதிகமாக வெளியே வருவதில்லையாம்.
டெல்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யட்டப்பட்ட டிடிவி தினகரன், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் விசாரணை கைதியாக இருந்தாலும் அடைக்கப்பட்டுள்ள அறையை விட்டு வெளியே வருவதேயில்லை என்கின்றனர்.
திஹாரில் சிறை வளாகத்தில் உள்ள 7 வது சிறையின் 2 வது எண் வார்டில் தினகரன் அடைக்கப்பட்டுள்ளார். தினகரன் அன்றாடப் பொழுதுகளை எப்படிக் கழிக்கிறார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி ஆயிட்டேன்
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்ற வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ இப்போது டிடிவி தினகரனுக்கு நன்றாகவே பொருந்தும். பட்டு மெத்தையில் படுத்துறங்கி, குட்டி ராஜாவாக வலம் வந்த டிடிவி தினகரன் இப்போது திஹாரில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரு வசதியுமில்லை
தினகரனுடன் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனாவும் அதே அறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். இருவர் மட்டுமே அடைக்கப்பட்டுள்ள அந்த அறையில், ஒரு மின் விசிறியைத் தவிர வேறு எந்த பிரத்யேக வசதிகளும் அளிக்கப்படவில்லை. உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் என்று இருவருமே பேசிக்கொண்டிருப்பதை தவிர வேறு எந்த பொழுது போக்குமில்லை.
சப்பாத்தி கூடவே பருப்பு
சிறைச்சாலை வழக்கப்படி காலை 6 மணிக்கு தினகரனை சிறைக் காவலர்கள் எழுப்பி விடுகின்றனர். காலை 8 மணி அளவில் டீ அல்லது பால் மற்றும் காலை உணவு வழங்கப்படுகிறது. முற்பகல் 11.30 மணி அளவில் மதிய உணவு வழங்கப்படுகிறது. மதிய உணவாக சப்பாத்தி, சாதம், பருப்பு போன்றவை வழங்கப்படுகின்றன.
யாரை சந்திக்கிறார்?
ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் என சராசரியாக ஒரு நாளைக்கு 4 அல்லது 5 பேரை தினகரன் சந்தித்து வருகிறார். தண்டனைக் கைதியாக இருந்தால் வெளிநபர்களைச் சந்திக்க கடும் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், தினகரன் விசாரணைக் கைதி என்பதால், வெளி நபர்களைச் சந்திக்க கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை.
சோக மூடு
பகலில் சிறை வளாகத்திற்குள் வெளியே வந்து உலவலாம் என்றாலும், தினகரன் அதிகமாக வெளியே வருவதில்லை என்றே கூறப்படுகிறது. அப்படியே அறையை விட்டு வெளியே சென்றாலும் மாலை 6 மணிக்கு சிறை விதிப்படி தினகரன் மீண்டும் தனது அறைக்கே திரும்பி விடுவார்.
ஒரு வேலையுமில்லை
தண்டனைக் கைதிகள் என்றால் அவர்களுக்கு சிறையில் பணிகள் ஏதாவது ஒதுக்கப்படுவது உண்டு. தினகரன் விசாரணைக் கைதி என்பதால் அவருக்கு எந்த வேலையும் வழங்கப்படவில்லை. வரும் 15ஆம் தேதி நீதிமன்றக் காவல் முடிவடைந்து தினகரன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
ஜாமீன் கிடைக்குமா?
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள டிடிவி தினகரன் வரும் 15ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் திஹாருக்கு செல்வாரா? அல்லது ஜாமீன் பெற்று சென்னை திரும்புவாரா என்பதே அதிமுகவினரின் இப்போதய கேள்வியாக உள்ளது.