சசிகலாவை சந்திக்கிறார் தினகரன்... 'இளவரசி' குடும்ப பஞ்சாயத்துக்கான க்ளைமேக்ஸ் இன்று?
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்கிறார் தினகரன். இச்சந்திப்பில் விவேக், கிருஷ்ணப்பிரியா விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
பெங்களூரு: சசிகலாவை இன்று பெங்களூரு சிறையில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன் சந்திக்கிறார். இச்சந்திப்பின் போது இளவரசி குடும்பத்துடனான மோதல் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலா குடும்பத்தில் தினகரன் கை அரசியலில் ஓங்கியிருப்பதை யாரும் ரசிக்கவில்லை. தினகரனை ஒரு தனிமனிதராகவே திவாகரன் தரப்பு பார்க்கிறது.
இளவரசி குடும்பத்தைச் சேர்ந்த விவேக், கிருஷ்ணப்பிரியா ஆகியோர் மறைமுகமாக எதிர்க்கின்றனர். ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான விவகாரத்தில் தினகரனை பகிரங்கமாகவே விமர்சித்தார் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா.
விவேக் அமைதி
இதனால் கிருஷ்ணப்பிரியா மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார் தினகரன். மேலும் இச்சம்பவத்தின் போது ஒடிஷாவில் இருந்த விவேக், பிரியாவை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்தார் என்கிற ஆதங்கமும் தினகரனுக்கு இருக்கிறது.
கடுப்பில் தினகரன்
கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விவேக்தான் தினகரனுக்கான செலவுகளை பார்த்துக் கொண்டார். இம்முறை விவேக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டார். இதுவும் விவேக் மீதான தினகரனின் கோபத்துக்கு காரணம்.,
விவேக்குக்கு செக்
இது பற்றி சசிகலாவை கடந்த முறை சந்தித்த போது விலாவாரியாக தினகரன் போட்டுக் கொடுத்தார். இதனால் விவேக் வசம் உள்ள கணக்கு வழக்கு விவரங்கள் தினகரன் பக்கம் போகலாம் என கூறப்பட்டது. இதைத்தான் தினகரன் குடும்பம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
நம்பிக்கையில் தினகரன்
இந்த நிலையில் சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றுள்ளார் தினகரன். இச்சந்திப்பில் இளவரசி குடும்ப பஞ்சாயத்தில் தமக்கு சார்பாக சசிகலா உத்தரவுகளைத் தருவார் என நம்பிக்கையுடன் இருக்கிறார் தினகரன் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.