பதவிக்காக திண்டுக்கல் சீனிவாசன் என்ன வேண்டுமானாலும் பேசுவார்... தினகரன் பரபர பேட்டி!
சசிகலா முதல்வராக வேண்டும் என்று கண்ணீர் விட்டு கெஞ்சியவர் திண்டுக்கல் சீனிவாசன் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
குடகு : சசிகலா முதல்வராக வேண்டும் என்று அன்று கண்ணீர்விட்டு கெஞ்சியவர் திண்டுக்கல் சீனிவாசன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் குடகு பேடிங்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை தினகரன் நேரில் சந்தித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : எனக்கு அதரவு தெரிவித்துள்ள 21 எம்எல்ஏக்களும் தேர்தல் வந்தால் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கிறார்கள் என்று பாருங்கள்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இட்லி சாப்பிட்டதாக சொன்னதெல்லாம் பொய் என்று நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார். இதே திண்டுக்கல் சீனிவாசன் தான் சசிகலா காலில் விழுந்து அவர் பொதுச்செயலாளராக வேண்டும் என்று கண்ணீர் விட்டார். இன்றே ஆளுநரை சந்தித்து விடலாம் நீங்கள் தான் முதல்வராக வேண்டும் என கெஞ்சினார்.
மக்களே முடிவு செய்வார்கள்
அதிமுகவினர் யாரும் இதைச் சொல்லவில்லை அவருடைய பழைய பேச்சையும் இப்போதைய பேச்சையும் வைத்து சமூக வலைதளங்களே இதை கேலி செய்து வருகின்றன. அன்று கண்ணீர் விட்டவர் இன்று இப்படி பேசினால் அவருடைய பேச்சை எப்படி எடுத்துக் கொள்வது என்று மக்களின் அனுமானத்திற்கே விட்டுவிடுகிறேன்.
பதவிக்காக
பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார். பதவியில் ஒட்டிக்கொள்வதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார், அவருடைய பல நாள் ஆசை அமைச்சராக வேண்டும் என்று, அவர் வயதில் மூத்தவர் அவரைப் பற்றி இதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை.
தரம் தாழ வேண்டுமா?
முதல்வர் பழனிசாமி அரசு விழாவில் தரம் தாழ்ந்து பேசுகிறார். பொது நிகழ்ச்சியில் பேசும் போது என்னை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன் என்றெல்லாம் பேசுகிறார், இதெல்லாம் முதல்வர் பதவிக்கு அழகா. இவர்களின் பேச்சிற்கெல்லாம் இனி மவுனம் மட்டும் தான் என்னுடைய பதில். ஏனெனில் இவர்கள் அளவிற்கு நாமும் தரம் தாழ்ந்து போக வேண்டுமா என நினைக்கிறேன்.
அசிங்கமாக இருக்கிறது
தரம் தாழ்ந்தவர்களுக்கு பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது. வளைந்த முதுகோடு நின்று கொண்டிருப்பவர்கள் இவர்கள். கட்சியில் உண்மையாக செயல்படுபவர்கள் யாரையும் நாங்கள் நீக்கவில்லை, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டவர்களைத் தான் மாற்றி அமைத்துள்ளோம் என்று தினகரன் பேசியுள்ளார்.