இரட்டை இலைக்கு லஞ்சம்… தினகரனுக்கு ஜாமீன் தர டெல்லி கோர்ட் மறுப்பு
இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துவிட்டது.
டெல்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.
நான்கு நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு டெல்லி போலீசார், நள்ளிரவில் டிடிவி தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் கைது செய்துள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் மூலம் முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
லஞ்சம்
சுகேஷிடம் தினகரன் இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருமாறு கூறி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த 17ஆம் தேதி டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் இருந்து தினகரனுக்கு பிரச்சனை உச்சமடைந்தது.
கைது
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் அவரது உதவியாளர் ஜனார்தனா ஆகியோரிடம் 4 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நள்ளிரவில் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான டிடிவி தினகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டிடிவி தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜாமீன் மறுப்பு
இதனிடையே, தினகரன் தரப்பில் இருந்து ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தினகரனுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.