தீபிகாவுடன் திருமணத்திற்கு தயாராகி விட்டேன்: தினேஷ் கார்த்திக் அறிவிப்பு
டெல்லி: திருமணம் செய்து கொள்வதற்கான காலம் கனிந்துவிட்டது. அடுத்த ஆண்டு மத்தியில் திருமணம் செய்து கொள்வோம் என்று விளையாட்டுத்துறை காதல் ஜோடி தீபிகா பலீகல், தினேஷ் கார்த்திக் ஜோடி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கலும் காதலித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் காமன்வெல்த் போட்டி, ஆசிய விளையாட்டுப்போட்டி என இந்த ஆண்டு பிஸி ஷெட்யூலில் இருந்தார் தீபிகா எனவே திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இவர்கள் அடுத்த ஆண்டு (2015) மத்தியில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு தயார்
டெல்லியில் நேற்று நடந்த தனியார் நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டார். அப்போது அவர், ‘திருமண பந்தத்தில் இணைய நான் தயாராக இருக்கிறேன். தீபிகா பலிக்கலும் ஆரம்பத்தில் இருந்தே தயாராக உள்ளார்.
புரிந்து கொண்டோம்
திருமண தேதி ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆரம்ப காலத்தை விட இப்போது எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு உள்ளது.
சாதாரண தம்பதிகளாக இருப்போம்
நாங்கள் விளையாட்டுத்துறை தம்பதி. ஆனால் மற்றவர்களை போல் சாதாரணமான தம்பதியாக வாழவே ஆசைப்படுகிறோம்.
கிரிக்கெட் அணியில் இடம்
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பதே எனது லட்சியம். டோனி இருக்கும் போது விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக அணியில் இடம் பிடிப்பதை பற்றி நினைக்க முடியாது. எனவே ஒரு பேட்ஸ்மேனாக தீவிரம் கவனம் செலுத்தி வருகிறேன்' என்றார்.