மத்திய உளவு அமைப்பான ஐ.பி. புதிய தலைவராக தினேஷ்வர் ஷர்மா நியமனம்!
டெல்லி: மத்திய உளவு அமைப்பான ஐ.பி.யின் புதிய தலைவராக தினேஷ்வர் ஷர்மாவை மத்திய அரசு நியமித்துள்ளது.
ஐ.பி. அமைப்பின் தலைவராக உள்ள சையத் ஆசீப் இப்ராகிமின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. ஐ.பி.யில் தலைவர் பதவி வகித்த முதலாவது இஸ்லாமியர் சையத் ஆசீப் இப்ராகிம்.
லண்டனில் இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய சையத் ஆசீப் இப்ராகிம், ஐபியில் சிறப்பு இயக்குநராக பணியாற்றினார். ஐ.பி. தலைவராக இருந்த நேச்சால் சாந்து ஓய்வு பெற்றதால் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
மத்திய பிரதேச கேடரைச் சேர்ந்த 1977 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சையத் ஆசிப் இப்ராகிம் இம்மதம் ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து புதிய ஐ.பி. தலைவராக கேரளா கேடரைச் சேர்ந்த 1979 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தினேஷ்வர் ஷர்மாவை மத்திய அரசு நியமித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இவரது சொந்த மாநிலம் பீகார்.
புதிய ஐ.பி. தலைவர் தினேஷ்வர் ஷர்மா முன்னுள்ள சவால்களும் அவருக்கான சாதகமான அம்சங்களும்..
- உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் தற்போதைய சூழலில் உள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஐபி தலைவர் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டிய தருணம் இது..
- மிக முக்கியமாக உளவு அமைப்பில் காலியாக உள்ள சுமார் 30% பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம். மொத்தம் 26,800 பணியிடங்கள் இருக்க வேண்டிய உளவு அமைப்பில் 18,800 பேர் அளவில்தான் இருக்கின்றனர்.
- தற்போது ஐ.எஸ்.அமைப்பின் ட்விட்டர் பக்கத்தை பெங்களூரில் இருந்து இயக்கிய நபர் சிக்கியிருக்கிறார். இப்படி ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆகிய அமைப்புகள் இந்தியாவில் வேரூன்றுவது மிகப் பெரிய சவாலான அச்சுறுத்தலாகும்.
- சிமி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகிய உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள் மேலும் பல குழுக்களாகி இந்தியாவுக்குள் இயங்கி வருவதும் மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
- ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறும் நிலையில் அதனை தமது ஆதரவு தீவிரவாதிகள் மூலம் கைப்பற்றுவதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இந்தியாவிலும் கணிசமாக ஆட்களை தேர்தெடுப்பதில் ஐ.எஸ்.ஐ. முனைப்பு காட்டி வருவதால் மாநில உளவு அமைப்புகளுடன் ஐபி ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும்.
- அண்மைக்காலமாக சமூக விரோதிகள், பயங்கரவாத அமைப்பினருக்கு புகலிடம் தருமிடமாக கேரளா உருவெடுத்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் தாக்குதல் நடத்திவிட்டும் சரி தீவிரவாதிகள் புகலிடம் கோரும் இடமாக கேரளா உருமாறி இருக்கிறது.
- தற்போது ஐபி தலைவர் தினேஷ்வர் ஷர்மா, கேரளா கேடர் என்பதால் அவருக்கு இந்த போக்கு குறித்த தகவல்கள் தெரிந்திருக்கும் என்பது சாதகமான ஒரு அம்சமாக பார்க்கலாம். அதுவும் கேரளா கேடரான அஜித் தோவலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பது இருவருக்கும் நாட்டுக்கும் மிகவும் சாதகமானதாகும்.